304மெய்ப்பாட்டியல்
எ - டு :

....... ....... குன்ற நாடன்

உடுக்குந் தழைதந் தனனே யாமஃது

உடுப்பின் யாயஞ் சுதுமே, கெடுப்பின்

கேளுடைக் கேடஞ் சுதுமே, ஆயிடை

வாடல கொல்லோ தாமே ...... .......

(நற்-359)
 
எனவரும்.
 
சூ. 266 :

தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்

கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு

பொருந்திய நான்கே ஐந்தென மொழிப

(17)
 

க - து :

தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் ஐந்தாங் கூறு என்கிறது.
 

பொருள் :தெரிந்துடம்படுதல்,  திளைப்புவினை  மறுத்தல்,  கரந்திடத்
தொழிதல்,  கண்டவழியுவத்தல்  எனப்பொருந்திய  நான்கும்  ஐந்தாங்கூறு
எனப்புகல்வர் ஆசிரியர்.
 

இவை களவியலுட் கூறிய,  "மனைப்பட்டுக்  கலங்கிச்  சிதைந்த  வழித்
தோழிக்கு   நினைத்தல்   சான்ற   அருமறை    உயிர்த்தலும்,  அருமை
செய்தயர்ப்பினும்,  வழிபாடு   மறுத்தல்,  பெற்றவழி  மலியினும்"  (கள-21)
எனவரும்   கிளவி  முதலியவற்றிற்குரியவாக   நிகழும்  மெய்ப்பாடுகட்குப்
பொருள்களாம் என்பதை வலியுறுத்தப் 'பொருந்திய நான்கு' என்றார்.
 

1. தெரிந்துடம் படுதலாவது :   தலைவன்       ஒருவழித்தணத்தல்
முதலியவற்றையும்,  வரைவுநீட்டித்தலையும்  அம்பலும்,  அலரும்  எழுந்து
பரவுதலையும்  தாயர்   வெறியாட்டு   முதலியவற்றை   நிகழ்த்துதலையும்
பிறவற்றையும்   ஆராய்ந்து    இனிச்    செயற்பாலனவற்றைத்   தேர்ந்து
அறத்தொடுநிலை வாயிலாகத் தனது நிலைமையைத்  தெரிவிக்கத்  தலைவி
உள்ளம் நேர்தல்.
 

உடம்படுதல்  என்பது  ஈண்டுத்  தெரிவித்தல்   என்னும்  பொருள்பட
நின்றது.  பொதுப்படக்   கூறியுள்ளமையான்   தலைவி   உடம்போக்கிற்கு
உடம்படுதலும் கொள்க.
 

எ - டு :

                        ...............அன்னை

எவன்செய் தனையோநின் இலங்கெயிறு உண்கென

மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து

உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து

உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்

காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி

தீந்தொடை நரம்பின் இமிரும்

வான்தோய் வெற்பன் மார்பணங் கெனவே

(நற்-17)
 

எனவரும். இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.