மெய்ப்பாட்டியல்

2. திளைப்புவினை மறுத்தலாவது :   தலைவனது     வருந்தொழிற்
கருமையும் இடையூறும் எண்ணித் தலைவி  வரைவு  கடாதற்  கருத்தினான்
இருவகைக்குறிக்கண்ணும்  இடையீடு  செய்து  கூட்டத்தைத்  தவிர்த்தலாம்.
தவிர்த்தலை மறுத்தல் என்றார்.
 

எ - டு :

கருங்கற் கான்யா றருஞ்சுழி வழங்கும்

கராஅம் பேணாய் இரவரின்

வாழேன் ஐய மைகூர் பனியே

(நற்-292)
 
எனவும்
 

குடிமுறை புரக்கும் நெடுமலை நாட

உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும்

இரவின் அஞ்சாய், அஞ்சுவல் இரவின்

ஈரளைப் புற்றம் காரென முற்றி

இரைதேர் எண்கினம் அகழும்

வரைசேர் சிறுநெறி வாரா தீமே

(நற்-336)
 

எனவும் வரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.
 

3. கரந்திடத் தொழிதலாவது :தலைவனைக் கண்டவழி உளந்தடுமாறு
மென  அஞ்சி  அவன்  காணாவகையிற்  கரந்து  மனையிடத்து  அடங்கி
அவனின் நீங்கியிருத்தல். ஒழிதலாவது தலைவன் வழியமையாது தவிர்த்தல்.
தங்குதல் எனக்  கருத்துப்  பொருள்  கூறுவர்  உரையாசிரியன்மார்.  அது
சொற் பொருளாகாமை எழுத்ததிகாரத்து விளக்கப்பட்டது.
 

எ - டு :

யாவதும் அறிகிலர் கழறு வோரே

தாயில் முட்டை போல உட்கிடந்து

சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தே

யாமைப் பார்ப்பின் அன்ன

காமங் காதலர் கையற விடினே

(குறு-152)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கண்டவழி உவத்தலாவது :   கரந்துறைதலால்    ஆற்றாமைமிக்கு
வருந்திப்  புலம்பியிருக்குங்கால்  தலைவன்  'புகாஅக்  காலை  புக்கெதிர்
பட்டுழியும் பகாஅ விருந்தின் பகுதியாய  வழியும்' (கள-17) கண்டு  பெருங்
களிப்புறுதல்.
 

எ - டு :

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு

(குறள்-1281)
 

இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.