| சூ. 267 : | புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் |
| கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு |
| புலம்பிய நான்கே ஆறென மொழிப |
(18) |
க - து : | புறஞ்செயச் சிதைதல் முதலியவை ஆறாங்கூறு என்கின்றது. |
பொருள் :புறஞ்செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவு உரைத்தல் எனப் புலப்படுத்தப்பட்ட நான்கு பொருளும் ஆறாங் கூறென விளம்புவர் ஆசிரியர். |
இவை களவியலுட் கூறிய நோக்குவவெல்லாம் அவையே போறல் மறத்தல், மயக்கம் (கள-9) காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையில் மயங்கிக் கையறு பொழுதினும், (கள-17) நொந்து தெளிவொழிப்பினும், தமர்தற்காத்த காரண மருங்கினும், பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும், (கள-21) எனவரும் கிளவி முதலாயவற்றிற்குரியவாக நிகழும் மெய்பாட்டுப் பொருள்கள் என்பது விளங்கப் புலம்பிய நான்கே என்றார். புலம்பிய என்றது புலஞ்செய்த என்றவாறாம். சொல்லிய எனினும் ஒக்கும். புலம்பல் - சொல்லுதல், அறிவித்தல். |
1. புறஞ்செயச் சிதைதலாவது: செவிலியும் ஆயத்தாரும் செய்யும் ஒப்பனைகள் தலைவன் கண்டு பயனுறாது கழிதலைக் கருதி அவர்தாம் ஒப்பனை செய்யும்வழி உள்ளம் சிதைந்து வருந்துதல். இஃது அழுகைக்குப் பொருளாக வரும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. |
2. புலம்பித் தோன்றலாவது: தலைவியின் நெஞ்சம் தலைவன் வழிச்சென்று இணைந்து நிற்றலான் பண்டுபோலக் கலந்து விளையாடாமல் ஆயத்தாரிடையே இருந்தும் தான்தனியள் போலக் காணப்படுதல். |
| எ - டு : | இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும் |
| ஆர்கலி யாணர்த் தாயினும், தேர்கெழு |
| மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப் |
| புலம்பாகின்றே தோழி |
(நற்-38) |
எனவரும். |
இதுவும் அழுகைக்குப் பொருளாக அமையும். இளிவரல் என்பதற்கும் ஏற்கும். |
3. கலங்கி மொழிதலாவது : தலைவன் வரைபொருள் முதலியவை பற்றிப் பிரிந்தமையான் உற்ற நிறையழிதுயரம் காரணமாக மறை புலப்படாமாறு உளங்கலங்கிப் பேசுதல். |