மெய்ப்பாட்டியல்
எ - டு :

நக்கு நலனும் இழந்தாள் இவளென்னும்

தக்கவிர் போலும், இழந்திலேன் மன்னோ

மிக்கவென் நாணும் நலனுமென் உள்ளமும்

அக்கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன்று

உக்காண், இஃதோர் உம்புயிர்க் கூற்றாகச்

செக்கரம் புள்ளித் திகிரி அலவனொடியான்

தக்கது பன்மாண் நினைந்து

(கலி-146)
 

எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.
 

4. கையறவுரைத்தலாவது :  தனிமையுறுத்தும்    தாங்காத்   துயரான்
தடுமாறும் நெஞ்சினளாய தலைவி தனது அச்சமும் நாணும் மடனும் இகந்து
தானுற்ற அவலத்தைச் சுற்றமறியப் பேசுதல்.
 

எ - டு :

நினையுமென் உள்ளம்போல் நெடுங்கழி மலர்கூம்ப

இனையுமென் நெஞ்சம்போல் இனங்காப்பார் குழல்தோன்ற

சாயஎன் கிளவிபோல் செவ்வழியாழ் இசைநிற்பப்

போயவென் ஒளியேபோல் ஒருநிலையே பகல்மாயக்

காலன் போல்வந்த கலக்கத் தோடென்றலை

மாலையும் வந்தின்றினி

(கலி-143)
 

என வரும்.
 

இதுவும் இளிவரலுக்குப்  பொருளாக  அமையும்.  கலங்கி  மொழிதலும்
கையறவுரைத்தலும்    அகனைந்திணைக்கண்    விரவும்   பெருந்திணைப்
பகுதிகளாகும்.
 

சூ. 268 :

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

மன்னிய வினைய நிமித்த மென்ப

(19)
 

க - து :
 

மேற்கூறிய     இருபத்து      நான்கனோடு     அன்னபிறவும்
காமவொழுக்கத்து மெய்ப்பாட்டுப் பொருளாக வருமென்றும், இவ்
இருபத்து  நான்கும்  நிலைபேறுடைய  காமஒழுக்கம்  நிகழ்தற்கு
நிமித்தமாம் என்றும் கூறுகின்றது.
 

பொருள் :மேல்  ஆறு   கூறுகளாக   வகுத்தோதப்பெற்ற  இருபத்து
நான்கும் அவை போல்வன  பிறவும்  அவற்றொடு  கூடி  நிலைபேறுடைய
காமவொழுக்கத்தினது நிமித்தமாம் என்று கூறுவர் புலவர்.
 

"எல்லா  உயிர்க்கும்  இன்பமென்பது  தான  மர்ந்து  வரூஉம்  மேவற்
றாகும்". ஆதலின், மன்பதை மறையாது  நிலை  பெறுதற்குக்  காரணமாகிய
காம ஒழுக்கம் "மன்னிய வினை" எனப்பட்டது.