1. பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளங்குதல் புலனாகும். |
எ - டு : | அவனுந்தான் |
| ஏனல் இகணத் தகிற்புகை யுண்டியங்கும் |
| வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் |
| தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும் |
| கானக நாடன் மகன் ...... ....... |
(கலி-39) |
இதன்கண் அவனும் என்ற உம்மையான் அவளும் கானநாடன் மகள் என்பது போதரும். |
2. குடிமையாவது : பண்பாடு. அஃதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக் கொண்ட சால்பு. |
குலம், குடிமை என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு என்பதை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினார் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க. |
மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமை யுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க. |
எ - டு : | நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் |
| என்றும் என்றோள் பிரிபறி யலரே |
| தாமரைத் தண்டா தூதி மீமிசைச் |
| சாந்திற் றொடுத்த தீந்தேன் போல |
| புரைய மன்ற புரையோர் கேண்மை |
| நீரின் றமையா உலகம் போலத் |
| தாமின் றமையா நந்நயத் தருளி |
| நறுநுதல் பசத்தல் அஞ்சிச் |
| சிறுமை யுறுபவோ செய்பறி யலரே |
(நற்-1) |
இதன்கண் நின்ற சொல்லர் என்பதனான் தலைவனது பண்பும் (குடிமை) தம்மின்றமையா நம் என்பதனான் தலைவியது பண்பும் விளங்குதலைக் கண்டு கொள்க. |