348உவமவியல்

நின்றது.   எனவே   மேற்கூறிய  நான்கும்  உயர்வு கருதி நிற்கும் என்பது
புலனாம்.
 

எ - டு :

"அரவுநுங்கு மதியின் நுதல்ஒளி கரப்ப" எனவும்

"உள்ளூதாவியின் பைப்பய நுணுகி" எனவும் வரும்.

 

உவமிக்கப்படும்  பொருட்கண்   கிடக்கும்  இவ் ஐவகைப் பண்புகளும்
உவமங்  கூறுதற்கு நிலைக்களமாதல் போலச்  சுவையுணர்வுகளும்  உவமந்
தோன்றுதற்குக்  காரணமாக  அமைதலான் எண்வகை  மெய்ப்பாட்டிற்குரிய
சுவைகளும் உவமங்கூறற்கு நிலைக்களமாதலைப் பின்னர்க் கூறுவார்.
 

சூ. 282 :

முதலும் சினையுமென் றாயிரு பொருட்கும் 

நுதலிய மரபின் உரியவை உரிய  

(6)
 

க - து :

உவமங் கூறுதற்குரியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :உவமங் கூறுமிடத்து, முதற்பொருள், சினைப்பொருள் எனப்
பாகுபடும் அவ்விரு  பொருட்கும் தொன்னூலோர் கருதிக் கூறிய இலக்கண
மரபினான் வருதற்குரியவை உரியவாகும்.
 

என்றது,   உவமங்கூறுமிடத்து   முதற்பொருளுக்கு    முதற்பொருளும்
சினைப்பொருளுக்குச் சினைப்பொருளுமாக  வருதலேயன்றி  உவமத்தன்மை
ஒத்து அமையுமிடத்து அவை பிறழ்ந்து  வரினும் "தகுதியும்  வழக்கும்  தழீ இன" வாக வழங்கி வருமாயின் கொள்ளப்படும் என்றவாறு.
 

வழுவின்றி அமையும் தொடர்மொழியாக்கம் பற்றிய மரபுகளைக்  கூறும்
கிளவியாக்கத்துள்.
 

செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு 

அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே 

(கிளவி-16)
 

எனக்  கூறிப்  பின்னர், அவை ஒரோவிடத்துப் பிறழ்ந்துவரினும் அவை
மரபு பற்றி வந்தனவாயின் வழுவென்று களையப்படா என்பதனைத்,
 

தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும் 

பகுதிக் கிளவி வரைநிலை யின்றே 

(கிளவி-17)
 

எனக்   கூறினாராகலின்    (இச்சூத்திரத்தின்    மெய்யுரையை  எனது
சொல்லதிகார  உரையுட் கண்டுகொள்க).   அங்ஙனம் தகுதியும்   வழக்கும்
பற்றி வருமென்பார் "நுதலிய மரபின்" என்றார். ஆண்டு முதலும்  சினையும்
பிறழ்ந்து   வருங்கால் "உவமையும்  பொருளும் ஒத்தல்" வேண்டுமாகலான்
ஒவ்வாதன உரியவாகா   என்பது   விளங்க   "உரியவை  உரிய" என்றும்
கூறினார்.