"நுதலிய" என்றது கருதிக் கூறிய என்றவாறு. அதனான் முதலும் சினையு மெனப்பகுத்தற்கு ஏலாதனவற்றைச் சான்றோர் வழங்கியவாறு கொள்க என்றவாறாயிற்று. அஃதாவது |
"விசும்பினன்ன சூழ்ச்சி" என்றவழி விசும்பு என்னும் பொருளும் சூழ்தல் என்னும் தொழிலும் முதற்பொருள் எனக் கோடலும், "பூவமன்றன்று சுனையுமன்று" என்றவழிச் சுனையை முதற்பொருளெனக் கொள்ளாமல் சுனையுள் பூத் தோன்றிய இடத்தை நோக்கிச் சினையாகக் கோடலும், இவ்வாறு வருவன பிறவுமாம். |
எ - டு : "வரைபுரையும் மழகளிற்றின்" (புறம்-38) என்பது முதலுக்கு முதலே வந்த உவமத் தொடர். தாமரை புரையும் காமர் சேவடி (குறு-கடவுள்) என்பது சினைக்குச் சினையே வந்த தொடர். நெருப்பின் அன்ன சிறுகட் பற்றி (குறு-190) என்பது சினைக்கு முதல் உவமமாக வந்த தொடர். அடைமறை ஆயிதழ்ப்போது போற்கொண்ட குடைநிழற்றோன்று நின் செம்மலைக் காணூஉ (கலி-84) என்பது முதலுக்குச் சினை உவமமாக வந்தது. |
உவமத்தோற்றம், வினை, பயன், மெய், உரு என்பவை பற்றி நிகழ்தலின் திணையும் பாலும் மயங்கி வருதல் இலக்கணமே என்பதும் அங்ஙனம் வருதல் வழுவமைதியாகாதென்பதும், "விரவியும் வரூஉம்" என்பதனாற் கொள்ளக்கிடந்தமையின் ஆசிரியர் அதுபற்றி விதந்து கூறாராயினார். அவை மரபுபற்றி வேண்டியவாறு வருமென்க. |
எ - டு :மாரி யானையின் வந்துநின் றனனே (குறு-16) என்பது திணை பிறழ்ந்து வந்தது. ...... ....... ........ ........ ........ ......... ......... "கூவற் குரலான் படுதுயர் இரவிற்கண்ட உயர்திணை ஊமையன் போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே" (குறு-232) என்பது உயர்திணையுள் பால் பிறழ்ந்து வந்தது. கடும்பமர் நெடுவே ளன்ன மீளி உடம்பிடித்தடக்கை ஓடாவம்பலர் (பெரும்பாண்.75-76) என்பது உயர்திணைக்கண் ஒருமை பன்மை பிறழ்ந்து வந்தது. "அவ்வான், இலங்கு பிறையன்ன விலங்குவால்வை யெயிறு" என்பது அஃறிணையுள் பால் பிறழ்ந்து வந்தது. |
பிறவும் இவ்வாறு வருவனவற்றைக் கண்டுகொள்க. இவ்விலக்கணநெறி நோக்காமல் இவையெல்லாம் மயங்கி வந்தன எனக்கருதிப் பேராசிரியர் இச்சூத்திரத்துள் மிகைப்படுத்தி அடக்குவார். |