உவமச் சொற்கள் தனித்துப் பொருளுணர்த்தும் எனக்கூறின் "தமக்கியல் பிலவே" (இடை-1) என்பதனொடு மாறுகொள்ளுமெனின்? கொள்ளாது; என்னை? உவமத்தையும் பொருளையும் இணைப்பதற்கு அவை எச்சமாயும் முற்றாயும் முதனிலைச் சொல்லாயும் வினைத்தன்மையுற்று வருங்கால் பெயரையும், வினையையும் சார்ந்தல்லது தனித்து வாராமையான் என்க. அதனானன்றே ஆசிரியர் "பெயரொடும் வினையொடும் நடை பெற் றியலும்" என்றார் என்க. |
இனி, உவம உருபுகளுள் சில பெயராயும் நிற்குமெனப் பிறழக் கருதிக் கூறினாருமுளர். அவர் "மழையேர் ஐம்பால்" என்பதன்கண் ஏர் என்பது பெயராக நின்றதென்பார். அது மழைநேர் ஐம்பால் என்னும் பாடத்தின் பிழைவடிவமென்க. மற்று, ஏர் என்பது "முத்தேர் முறுவலாய்" (கலி-) என உவமச்சொல்லாயும் வரும். அஃது ஏர, ஏர்ப்ப எனவும் வரும். ஆண்டு ஏர் என்பது எழுச்சி, இலங்குதல் என்னும் பொருள்படும் உரிச்சொல் வினைத்தன்மையுற்று முதனிலைத் தொழிற்சொல்லாய் நின்றதென்க. |
இனி, உவமச்சொற்களை அவற்றின் உரியடிகளை (வேர் நிலையை) ஓர்ந்து அவை வினை பயன் மெய் உரு என்னும் நான்கற்கும் வகைப்பட்டுச் சிறந்துரிமை பெற்று வருமாறு முறையே கூறுவார். |
| சூ. 288 : | அன்ன ஆங்க மான விறப்ப |
| என்ன உறழத் தகைய நோக்கோடு |
| கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம் |
(12) |
க - து : | வினை உவமத்திற்கு ஏற்கும் உவமச்சொற்கள் இவை என்கின்றது. |
பொருள் :தொழிற்றன்மை கருதிய அன்ன முதலாகிய எட்டும் வினையுவமத்தின் பாலாக வரும் உவமச்சொற்களாம். ஒடு எண்ணின்கண் வந்தது. கண்ணிய என்பதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. |
எ-டு: | 1. | எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து | (அகம்-106) |
| 2. | கயநாடி யானையின் முகனமர்ந்தாங்கு | (அகம்-6) |
| 3. | புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப்பிறழும் | (பெரு-269) |
| 4. | புலி விறப்ப ஒலி தோற்றலின் | (இளம்-மேற்) |
| 5. | புலி என்னக் கலி சிறந்தூராஅய் | ( " ) |