வேட்கை நிகழ்ந்த அளவானே கூட்டம் நிகழ்தலும், அக்காலை நிகழாமல் மற்றைநாள் இடந்தலைப்பட்டு அவ்வழிக் கூட்டம் நிகழ்தலும், பாங்கனான் இடந்தலைப்பாடெய்த்தி நிகழ்தலுமாகும். அம்மூன்று நிலைகளிலும் உள்ளப் புணர்ச்சியளவானே களவு நிகழ்ந்து வரைந்து பின்னர்க் கூட்டம் நிகழ்தலும் வரைவு நீட்டித்த விடத்து ஆற்றாமையான் தோழி இடைநின்று கூட்டப் புணர்ச்சி நிகழ்தலும் உண்டு. அவ்வழி வரைவு நீட்டித்த காலை, பகற்குறி, இரவுக்குறி, உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கௌவை முதலிய நிகழ்தலும் தோழியிற் புணர்வாகவே கொள்ளப்படும். |
களவொழுக்கத்தின்கண் தலைமக்கள் கூற்றிற்குரியவாகப் பின்னர்க் கூறப்படும் கிளவிகளுள் (1) மெய்தொட்டுப்பயிறல், பொய்பாராட்டல், மறைந்தவற்காண்டல், தற்காட்டுறுதல் போல்வன வேட்கைபற்றியனவாக அமையும். (2) நீடு நினைந்திரங்கல், பெட்ட வாயில் பெற்றிரவு வலியுறுத்தல், காணா வகையிற் பொழுதுநனி இகத்தல் போல்வன ஒருதலையுள்ளுதல் பற்றியனவாக அமையும். (3) தண்டாதிரத்தல், பிரிந்தவழிக்கலங்கல் கையறு தோழி கண்ணீர் துடைத்தல் போல்வன மெலிதல் பற்றியவையாக அமையும் (4) நிற்பவை நினைஇ நிகழ்பவையுரைத்தல், இட்டுப் பிரிவிரங்கல் போல்வன ஆக்கஞ்செப்பல் பற்றியனவாக அமையும். (5) தண்டாதிரத்தல் கேடும் பீடும் கூறல், மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தல் போல்வன நாணுவரையிறத்தல் பற்றியனவாக அமையும். (6) பண்பிற் பெயர்த்தல், அன்புற்று நகுதல், வரைவுதலை வருதல், களவறிவுறுதல் போல்வன மறத்தல் பற்றியனவாக அமையும். (7) சொல்லவட் சார்த்தி புல்லியுரைத்தல், வேட்கையின் மயங்கிக் கையறுதல், நொந்து தெளிவொழித்தல் போல்வன மயக்கம் பற்றியவையாய் அமையும். (8) மடன்மாகூறல், அழிவுதலை வந்த சிந்தை போல்வன சாக்காடு பற்றியனவாய் அமையும். ஏனையவற்றையும், தோழி கூற்று, செவிலி கூற்று ஆகியவற்றுள் இவ்வுணர்களான் வருவனவற்றையும் பொருந்துமாற்றான் நோக்கி இவற்றுள் அடக்கிக் கொள்க. |