களவியல்19

திணைக்குரிய   மாந்தரிடத்துத்   தலைவன்   முதலானோர்    கூற்று
நிகழ்த்துமிடத்தும்    பொருந்துமாற்றான்   அமைந்து    வரும்   என்பது
விளங்கப் பொதுப்பட "இன்னவை நிகழும் என்மனார் புலவர்" என்றார்.
 

அறத்தொடு    நிற்றலும்,    வரைவு    கடாதலும்    பிறவும்   பற்றி
வருவனவெல்லாம் அடங்க இவை ஏழும் என்னாது 'இன்னவை'   என்றார்.
அவையெல்லாம் ஓராற்றான் இவற்றுள் அடங்குமாறறிந்து கொள்க.
 

இவற்றை இயற்கைப்    புணர்ச்சித்திறன்   கூறியதாக    இளம்பூரணர்
வரைதலும்,    இவை    தலைவனுக்கே    உரியவை      என்பதுபோல
நச்சினார்க்கினியர்        வரைதலும்  மயங்கவைத்தல், மாறுகொளக்கூறல்,
குன்றக்கூறல் என்னும் சிதைவின்பாற்படுமென்க.
 

பொருள் : 1)  முன்னிலையாக்கல்   என்பது;      தாம்   உரைக்கப்
புகுவனவற்றைக்     கேட்டற்குரியாரை    விளித்து    முன்னிலையாக்கிக்
கோடலாம். புள்ளும், விலங்கும்,     கடலும், கானலும் தம்   நெஞ்சுமாகிய
அஃறிணைப்    பொருள்களும்  அடங்கப் பொதுப்பட  முன்னிலையாக்கல்
என்றார்.
 

எ - டு :

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

(குறுந்-58)
 

இது தலைவன் பாங்கனை முன்னிலைப்படுத்தியது.
 

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்

தன்னூர் மன்றத்து என்னன் கொல்லோ

இரந்தூண் நிரம்பா மேனியொடு

விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே

(குறு-33)
 

இது தலைவி தோழியை முன்னிலைப்படுத்தியது,
 

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே

பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்

ஐய! அற்றால் அன்பின் பாலே

(குறுந்-196)
 

இது தோழி தலைவனை முன்னிலைப்படுத்தியது.
 

யார்அணங் குற்றனை கடலே!

(குறு-163)
 

இது தலைவி கடலை முன்னிலைப்படுத்தியது.