அவளைத் தலைப்படுதலை விரும்பி நெருநற் கண்ட இடத்திற்குச் சென்ற காலை தலைவியும் அவ்வாறே நினைந்து வந்தாளாக அவளை எய்தி நுகர்ச்சி பெற்றவழித் தலைவன் மகிழும் மகிழ்ச்சியும் என்றவாறு. ஆண்டுத் தலைவன் கூற்று நிகழ்த்தலும் ஒரோவழி நிகழுமெனக் கொள்க. |
இஃது இடந்தலைப்பாடு என்னும் இரண்டாவது பகுதியாகிய கூட்டமாம். இஃது ஒருமுறையோ சில முறையோ நிகழலாம். எல்லாம் இடந்தலைப்பாடு என்னும் ஒரு கூறாகவே கொள்ளப்படும். அவ்வாறே பாங்கற்கூட்டம், தோழியிற் புணர்வு என்னும் பகுதிகளும் ஒருமுறைக்கு மேற்பட்டு நிகழினும் ஒரு கூறாகவே கொள்ளப்படும். |
10) பிரிந்தவழிக் கலங்கலும் என்றது : இடந்தலைப்பட்டுக் கூடிய தலைவி பிரிந்து சென்று ஆயத்தொடு சேர்தலையும் ஆண்டு அவளது தலைமைப்பாட்டினையும் ஒன்றித்தோன்றும் தோழி அவளைத் தழுவி மகிழ்தலையும் கண்டு இனி அவளை அடைதல் அரிதாகுங்கொல் எனத் தலைவன் எண்ணி மனக் கலக்கமுறுதலும் என்றவாறு. |
இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவியைத் தேற்றுவித்துத் தானே விடுத்தலின் ஆண்டுக் கலக்கங் கூறாராயினார். இவ் இரண்டு கிளவிகளையும் இடந்தலைப்பாட்டினைச் சாரவைத் தாராயினும் இனி வரும் பாங்கற் கூட்டத்திற்கும், பாங்கியிற் கூட்டத்திற்கும் உரியவாக வருதலின் இவற்றை இடைநிலை விளக்காகக் கொள்க. |
| எ - டு : | வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் |
| அதற்கன்னள் நீங்கு மிடத்து |
(குறள்-1124) |
11) நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் என்பது : மற்றை நாளும் தலைவியைத் தலைப்படுதலை விரும்பிச் சென்ற தலைவன் ஆண்டுத்தலைவி வாராதவழித் தன் உள்ளத்துக் கிளர்ந்தெழும் அவாவினையும் தலைவியை எய்தப் பெறாத துன்பினையும் நினைத்து, இனி அவளை எய்தும் வழி யாதென எண்ணிப் பாங்கனாற் கூடுமெனத் தன் நெஞ்சிற் குரைத்தலும் என்றவாறு. |
தலைவி ஆயத்தான் சூழப் பெற்றனள் கொல்? தாயர் காவல் கொண்டனர் கொல்? என்றாற் போல எண்ணுதல் நிற்பவை நினைதலாம். இத்துயரினை மாற்றுவான் உயிரன்ன |