களவியல்33
எ - டு :

அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்

கன்றுகால் யாத்த மன்றப் பலவின்

வேர்க்கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும்பழம்

குழவிச் சேதா மாந்தி யயலது

வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும்

பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனக்

கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த

செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக்

கொய்புனங் காவலும் நுமதோ?

கோடேந் தல்குல் நீடோ ளீரே

(நற்-213)
 

இது ஊரும், செய்தியும் பற்றி வினாவியது.
 

செறிகுரல் ஏனற் சிறுகிளி காப்பீர்

அறிகுவேன் நும்மை வினாஅய்-அறிபறவை

அன்ன நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர்

என்ன பெயரிரோ நீர் 

(நச்-மேற்)
 

இது பெயர் வினாவியது.
 

நறைபரந்த சாந்தம் அறவெறிந்து நாளால்

துறைஎதிர்ந்து வித்தியவூழ் ஏனல் - பிறைஎதிர்ந்த

தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ?

ஏமரை போந்தன வீண்டு

(திணைமாலை-நூ.ஐ-1)
 

இது   கெடுதி   வினாயது.  பிறவும்   தொகையுள்ளும்   பிற  சான்றோர்
இலக்கியத்தும் கண்டு கொள்க.
 

15) தோழி குறையவட்சார்த்தி மெய்யுறக் கூறலும் என்பது=தலைவன்தான்
குறையுறுதல்   தலைவியிடத்ததாய்   இருந்தது எனத் தோழி  தலைவியைச்
சார்த்தி (ஓர்ந்து) உண்மையென உணருமாறு கூறுதலும் என்றவாறு.
 

அஃதாவது  இருவரும்  உள்வழிக் குறிப்பாகக் கூறிய தலைவன் தோழி
தனிந்திருந்த   வழிக்  கூறுங்கால்   தான்   குறையுறுதல்    தலைவியை
நோக்கியதாகும்  என  அவள்  உணருமாறு  கூறும் என்றவாறு. 'மெய்யுற'
என்றது தலைவன் கூறுவன உண்மை எனத் தோழி உள்ளத்திற்  பொருந்த
என்றவாறு.
 

எ - டு :

பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்

தண்கமழ் புதுமலர் நாறும் ஓண்டொடி

ஐதமைந் தகன்ற அல்குல்

கொய்தளிர் மேனி ! கூறுமதி தவறே

(ஐங்-176)