34களவியல்

இது  தலைவி   இவ்வாறு   கொண்டனள் அதற்குக் காரணம் என்? எனத்
தோழியைக் குறையுற்றது.
 

இதனைத்  தோழி  கூற்றாகக்  கொண்டு பொருள் கூறுதல் நூல்நெறிக்கு
முரணாம்   என்னை?  பின்னர் முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துரைத்தல்
முதலாகத் தோழி கூற்று நிகழுமாறு ஆசிரியர் ஓதலானும் தலைவன் கூற்றுப்
பற்றிய   சூத்திரத்துள்   தோழி கூற்றினை இடைவைத்தல் குற்றமாகலானும்
என்க. இதனை நச்சினார்க்கினியர் உரையானும் உணர்க.
 

16) தண்டாதிரப்பினும்   என்பது  :  தோழி  கூற்றானும்  குறிப்பானும்
ஏதிலான்   போல  நடந்துகொள்ளுமிடத்துத்  தனது தலைமைப் பாட்டிற்கு
ஒவ்வாதெனத்   தவிராமல்    எளியனாய்க்  கையற்று  இரந்து  கூறுதலும்
என்றவாறு.
 

தண்டாது   என்பதற்கு  நிறைவுற்றமையாது  என்பதும் பொருளாகலான்
தோழியிற்புணர்வு ஒருகால் நேர்ந்த பின்னரும், வரைதலை  மேற்கொள்ளும்
வாய்ப்பு நேராதவழிக் களவினை நீட்டிப்பான் பகற் குறியும்  இரவுக் குறியும்
வேண்டி நிற்றலும் இதனானே கொள்க.
 

எ - டு :

பாலொத்த வெள்ளருவிப் பாய்ந்தாடிப் பல்பூப்பெய்

தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்தென்

நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பாள் எவன்கொலோ

அஞ்சாயற் கேகோவல் யான்

(திணைமாலைநூ-ஐ-18)
 

இஃது ஆற்றாமை கூறி இரந்தது.
 

"தடமென் பணைத்தோள் மடநல்லீரே

எல்லும் எல்லின்று அசைவு மிகவுடையேன்

மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டி யானும்இக்

கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ"

(அகம். 110-10-13)
 

இது   குறிப்பான்   இரவுக்குறி    வேண்டி  இரந்தது.  பிறவும் சான்றோர்
செய்யுள்வழிக் கண்டுகொள்க.
 

17) மற்றைய வழியும் என்பது : தலைவியைக் குறியிடத்து  எதிர்ப்பட்டுக்
கூறலும் கூட்டத்தின் பின்னர்த் தலைவியைப்  புகழ்ந்து  கூறுதலும்  அல்ல
குறிப்பிட்ட வழி நெஞ்சொடு கூறுதலும் ஆகியவிடத்தும் என்றவாறு.