| சூ. 109 : | இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் |
| காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் |
| தானகம் புகாஅன் பெயர்த லின்மையின் |
| காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி |
| வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் |
| புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழிப் |
| பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் |
| வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் |
| தாளாண் எதிரும் பிரிவி னானும் |
| நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் |
| வரைதல் வேண்டித் தோழி செப்பிய |
| புரைதீர் கிளவி புல்லிய எதிரும் |
| வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்துப் |
| புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் |
| கிழவோள் மேன என்மனார் புலவர் |
(17) |
க - து : | மேல் 11, 12 ஆகிய சூத்திரங்களான் அதிகரித்து நின்ற பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும் அவள் நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது. |
மற்றுக் களவின்கண் தலைவிமாட்டு முறையாக நிகழும் கூற்றுக்கள் பின்வரும் "மறைந்தவற் காண்டல்" என்னும் சூத்திரத்தாற் கூறுப. |
பொருள்:1) இருவகைக்குறி பிழைப்பாகிய விடத்தும் என்பது; பகற்குறியும் இரவுக்குறியும் தலைவனை எய்துதற்காகாமல் பிழையுற்ற காலையும் என்றவாறு. குறி பிழைத்தலாவது, அல்ல குறிப்படுதல். அஃதாவது குறியிடத்துத் தன் வருகையைத் தலைவன் தலைவிக்குத் தெரிவித்தற்கு நிகழ்த்தும் செயற் குறிப்புக்கள் பிறவகையான் முன்னர் நிகழ்ந்து விடுதலும், தலைவன் வருதற்கு இயலாமல் இடையூறுபடுதலும் பிறவுமாம். |
செயற்குறிப்புக்களாவன : புள்ளெழுப்புதலும், நீர்நிலைகளிற் கல்லெறிந்து ஒலியெழுப்புதலும் சீழ்க்கை ஒலி எழுப்புதலும் பிறவுமாம். இவை பிறவாற்றான் நிகழ்ந்த வழி ஆண்டுத் தலைவி வந்து பார்த்துத் தலைவனைக் காணாது வருந்தி மீளுதல். தலைவன் செய்யாத குறியினைத் தலைவன் செய்ததாக எண்ணியது குறிபிழைத்தலாயிற்று. |