களவியல்45

3) தானகம்   புகாஅன்   பெயர்த   லின்மையின்   காட்சி ஆசையிற்
களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் என்பது :
அல்ல குறிப்பட்டு மீண்ட தலைவி    தலைவன்  பெருவேட்கையனாதலின்
குறியிடத்திற்கு வந்தன்றி மீளான் என  எண்ணி,  அவன் வந்து இழைத்துச்
சென்ற அடையாளங்களையேனும் காணற்கு  அவாவிக்    குறியிடத்திற்குச்
சென்று அவற்றைக் கண்டு வேட்கையான்  மயங்கிச்  செயலறு பொழுதினும்
என்றவாறு.
 

தலைவன்  இழைத்துச்  செல்லும் அடையாளங்களாவன; தான் புனைந்த
கண்ணி,  மாலை முதலியவற்றை  ஆண்டொரு  கொம்பிற்கு  அணிவித்துச்
செல்லுதலும் விரற்செறியினைப் பூட்டிச்செல்லுதலும் பிறவுமாம்.
 

எ - டு :

இக்காந்தள் மென்முகைமேல் வண்டன்றஃதிம் முகையின்

கைக்காந்தள் மெல்விரலாய் காணிதோ - புக்குச்

செறிந்ததுபோற் றோன்றும் தொடுபொறி யாம்பண்

டறிந்ததொன் றன்ன துடைத்து

(நச் - மேற்)
 

எனவரும்.
 

4) புகாஅக்   காலை  புக்கெதிர்ப்  பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்
கண்ணும்   என்பது  : மனையகத்தார்   உணவு  கொள்ளும்  வேளையில்
தலைவன்  விருந்தினனாய்    எதிர்ப்பட்டவழித்    தவிர்க்க   இயலாமல்
இல்லத்தார் அவனை விருந்தாக ஏற்ற பகுதிக் கண்ணும்   என்றவாறு.  பிற
பொழுதாயின் ஓம்புதல் ஒருதலையின்மையின் புகாஅக் காலை என்றார்.
 

எ - டு :

அன்னை வாழ்க பலவே தெண்ணீர்

இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத்

தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர்

எல்லமை விருந்தினென் என்ற

மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே

(நச்-மேற்)
 
எனவரும்.
 

5) வேளாண்  எதிரும்   விருப்பின்  கண்ணும் என்பது : தலைவி தான்
இரவுக்குறி நேர்வாளாய்ச், செல்லும் வழியிடை உறும்  ஏதங்களைக்  கூறித்
தங்கிச் சேறல் நலமாம் எனத் தலைவனை விருந்தாக ஏற்கும் விருப்பினைக்
குறிப்பினாற் புலப்படுத்துமிடத்தும் என்றவாறு.