இப்பிரிவு முடியுடை வேந்தர் ஏவலிற் பிரியும் அரசர்க்குரித்தென்பார் நச்சினார்க்கினியர். அது தலைவனது தலைமைக்கிழுக்காமாதலின் பொருந்தாமையறிக. எ. டு. வந்துழிக் கண்டு கொள்க. |
7) நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது : பெண்மைக் குணமாகிய நாணுடைமை தனது நெஞ்சினை அலைத்தலான் அதனைக் கைவிடுதலைக் கருதிய விடத்தும் என்றவாறு. |
அது தோழியின் மாட்டு அறத்தொடு நிற்றற் கண்ணும், உடன்போக்கு நேரும் வழியும் வரைவுகடாதற் பகுதியிடத்தும் நாணுத் துறந்து உரைத்தலாம். |
| எ - டு : | அளிதோ தானே நாணே நம்மொடு |
| நனிநீ டுழந்தன்று மன்னே இனியே |
| வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை |
| தீம்புனல் நெறிதர வீந்துக் காங்கு |
| தாங்கும் அளவைத் தாங்கிக் |
| காமம் நெரிதரக் கைந்நில் லாவே |
(குறு-149) |
இஃது உடன்போக்கு நேர்ந்த தலைவி தோழிக்குரைத்தது. பிறவும் சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க. |
8) வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் என்பது : தலைவன் வரைந்து கோடலை விரும்பி வரைவு கடாதற் பொருட்டுத் தோழி தலைவனை இயற்பழித்துச் செப்பிய புல்லியவாகிய கிளவியை எதிர்மறுத்து இயற்பட மொழியுமிடத்தும் என்றவாறு. புல்லிய புரைதீர்கிளவி எனக் கூட்டுக. |
புரைதீர்கிளவி = தலைவனது உயர்வினைக் குறைபடுக்கும் பழிப்புரை. இதனை இயற்பழித்தல் என்ப. எதிரும் என்பது எதிர்த்துக் கூறலும் என்றவாறு. அஃதாவது தோழி இயற்பழித்ததனை ஒக்குமெனக் கொள்ளாமல் மறுத்துரைத்தல். இதனை இயற்பட மொழிதல் என்ப. |
| எ - டு : | குறிஞ்சிக்கலி (42) வள்ளைப்பாட்டினில் தோழி, |
| நாணிலி எனக்கூறி, |
| "வரைமிசை மேல் தொடுத்த நெய்க்கண் இறாஅல் |
| மழைநுழை திங்கள் போல் தோன்றும் இழைநெகிழ |
| எவ்வம் உறீஇயினான் குன்று |
என இயற்பழித்தவழித் தலைவி |