களவியல்61

பேஎ நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை

தோளார் எல்வளை தெளிர்ப்ப நின்போல்

யானும் ஆடிக் காண்கோ? தோழி

வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேல்

திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க்

கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த

ஒண்பொறி மஞ்ஞை போல்வதோர்

கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே

(நச்-மேற்)
 

இதன்கண் சுனையாடினேற்கு இவ்வாறாயிற்றெனத் தலைவி  கரந்துகூறினமை
கண்டுகொள்க. ஏனையவற்றிற்கும் தலைவிகூற்று வந்துழிக் கண்டுகொள்க.
 

இக்கிளவிக்கு  இளம்பூரணரும்,  நச்சினார்க்கினியரும் கூறும்  உரையும்
விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஒவ்வாமையை ஓர்ந்தறிக.
 

24)  பொய்தலையடுத்த  மடலின்  கண்ணும்  என்பது : தலைவன் தன்
குறையைத்    தலைவி    கொள்ளுதற்   பொருட்டு   மடலூர்வல்  எனப்
பொய்ம்மையொடு  கூட்டிக் கூறுமிடத்தும்  என்றவாறு.   தலைவன்  கூறும்
மடற்கூற்றுப்    பொய்யெனக்   கருதினாளாயினும்   அதனை   விலக்கும்
குறிப்பொடு தலைவி கூற்று நிகழ்த்தும் என்க. இதனை அருளியல் கிளத்தல்
என்ப.
 

எ - டு :

வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே

அவையினும் பலவே சிறுகருங் காக்கை

அவையினும் அவையினும் பலவே குவிமடல்

ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த

தூக்கணங் குரீஇக் கூட்டுள சினையே

(நச்-மேற்)
 

25) கையறு  தோழி  கண்ணீர்  துடைப்பினும்  என்பது  :  தலைவியது
ஆற்றாமைகண்டு    செயலறவு    பட்டதோழி    அவள்    கண்ணீரைத்
துடைத்துத்துயர் மாற்ற முற்பட்ட விடத்தும் என்றவாறு.
 

எ - டு :

யாம்எம் காமந் தாங்கவும் தாம்தம்

கெழுதகை மையினா லழுதன தோழி

கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்

மன்ற வேங்கை மலர்ப்பதம் நோக்கி

ஏறா திட்ட ஏமப் பூசல்

விண்டோய் விடரகத் தியம்பும்

குன்ற நாடற் கண்டவெங் கண்ணே

(குறு-24)