| எவன்செய் தனையோ நின்இலங்கெயிறு உண்கென |
| மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து |
| உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து |
| உரைக்கலுய்ந் தனனே தோழி சாரற் |
| காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி |
| தீந்தொடை நரம்பின் இமிரும் |
| வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே |
(நற்-17) |
30) தமர்தற் காத்த காரண மருங்கினும் என்பது : தலைவியினது கரந்த நடையும் தோற்றப் பொலிவும் ஆகிய ஏதுக்களான் களவுப்புணர்ச்சியுண்மை தெரிந்த தமர் தன்னைப் புறம் போகாது இற்செறித்துக் காவல் செய்த இடத்தும் என்றவாறு. ஈண்டுத் தமர்என்றது தாயரைச் சுட்டி நின்றது. |
| எ - டு : | பெருநீ ரழுவத்து எந்தை தந்த |
| கொழுமீன் உணங்கற் படுபுள் ஓப்பி |
| எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇச் |
| செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி |
| ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் |
| தாழை வீழ்கயிற் றூசல் தூக்கிக் |
| கொண்டல் இடுமணற் குரவை முனையின் |
| வெண்டலைப் புணரி ஆயமொ டாடி |
| மணிப்பூம் பைந்தழை தைஇ அணித்தகைப் |
| பல்பூங் கானல் அல்கினம் வருதல் |
| கௌவை நல்லணங் குற்ற இவ்வூர்க் |
| கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை |
| கடிகொண் டனளே தோழி பெருந்துறை |
| எல்லையும் இரவும் என்னாது கல்லென |
| வலவ னாய்ந்த வண்பரி |
| நிலவுமணற் கொட்குமோர் தேர்உண் டெனவே |
(அகம்-20) |
31) தன்குறி தள்ளிய தெருளாக்காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும் என்பது : தான் குறித்த குறியிடத்திற்குச் செல்லுதற்கியலாது தவிர்ந்தமையைத் தலைவன் தெளியாது புக்குத் தலைவியைக் காணப்பெறாது நீங்கிய அவ் வறுங்களத்திற்குப் பின்னர் வந்து நோக்கி அது தன்னான் நேர்ந்த பிழையாக அக்குற்றத்தைத் தனதாகக் கொண்டு தலைவன்பாற் குறையின்று எனத் தெளியுமிடத்து என்றவாறு. |