3. - பொதுவியல்

227

   
 

(415)

இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை.

     எ - ன், தாப்பிசைப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பாவின் இடைநின்றமொழி முதலினும் ஈற்றினும் சென்று
பொருள்கொள்வது தாப்பிசைப்பொருள்கோளாம் எ - று.

     வ - று. “உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண, வண்ணாத்தல் செய்யா
தளறு” (குறள். 255.) இதனுள், ஊனென இடைநின்றமொழி ஏனை ஈரிடத்தும்
சென்றவாறு காண்க.

(65)

 

(416)

செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்
எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே.

     எ - ன், அளைமறிபாப்புப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) செய்யுளீற்றுநின்றமொழி இடையிலும் முதலிலும் சென்று
பொருள்கொள்வது அளைமறிபாப்புப் பொருள்கோளாம்.

     வ - று. “தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும்,
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமு, 1மூழ்ந்த பிணிநலிய
முன்செய்த வினையென்றே முனிவார் தாமும், வாழ்ந்த பொழுதினே வானெய்து
நெறிமுன்னி முயலா தாரே” (யா. வி.) எனவரும். (மூழ்ந்த - வளைந்த.)

     (பி - ம்.) 1 மூழ்ந்து
 

(417)

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே.

     எ - ன், கொண்டுகூட்டுப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) செய்யுளது பலஅடிகளுள்ளும் நின்றமொழிகளைப்
பொருளேற்குமிடத்தே ஏற்ப வருவித்துப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாவது எ - று.

     வ - று. “ஆலத்து மேல குவளை குளத்துள, வாலி னெடிய குரங்கு” (யா. வி.) இஃது, ஆலத்துமேல குரங்கு, குளத்துள குவளையென ஈரடியுட் பெயரையும்
வினையையும் வேண்டுழிக் கூட்டிக்கொண்டமையான் ஈரடிக் கொண்டுகூட்டு; இதனை
மொழிமாற்றென்பாரும், ஈரடிமொழிமாற்றென்பாருமுளர். அவ்வாறுகொள்ளின்,
ஏனைப்பல வடிகளுள்வரினும் பலபெயர் கொடுக்கவேண்டுமென்க. “தெங்கங்காய்
போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல், வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி,
அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே, வங்கத்துச் சென்றார் வரின்” (யா. வி.) இஃது,
அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எ - ம், தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்
கோழி முட்டையுடைத்தன்னபசலை எ - ம் பலவடியிற் சொற்களையுங் கூட்டிக்
கொண்டமையால், பலவடிக்கொண்டுகூட்டு.

(67)