230

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
பிறிதினிடத்தைச்சார்ந்து நடத்தலான் இடைச்சொல்லென்க.

     அவற்றுள் வேற்றுமையுருபாவன: ஐ ஆல் முதலாயின; வினையுருபாவன: அன்
ஆன் அள் ஆள் முதலாயின; சாரியையுருபாவன: அன் ஆன் இன் அல் முதலாயின;
உவமவுருபாவன: போல புரைய முதலாயின; தத்தம் பொருள ஆவன: ஏ ஓ முதலாயப்
பிரிநிலைமுதலாகிய 3பொருளைத் தோற்றிநிற்பன; இசைநிறையாவன: ஏ ஓ முதலாயின;
அசைநிலையாவன: மியா இக மோ மதி முதலாயின; குறிப்பாவன: விண்ணென,
ஒல்லென, கல்லென முதலாயின.

      “அதுமன்” (புறநா. 147), “அதுமற் றம்ம”, “அதுமற் றம்ம தானே” எ - ம்,
“கொன்னூர்” (குறுந். 138), “ஓஒ வுவம னுறழ்வின்றி” (கள. 36) எ - ம் பெயர்ப்
பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன. “வருகதில்”, “வருகதி லம்ம” (அகநா. 276),
“வருகதி லம்ம தானே” (புறநா. 147) எ - ம், “ஓஒ தந்தார்”, “ஏஏ அம்பன்
மொழிந்தனள் யாயே” எ - ம் வினைப் பின்னும் முன்னும் ஒன்றும் பலவும் வந்தன.
தனித்தும் வருங்கொலென்னும் ஐயமறுத்தற்கு, ‘தனித்தியலின்றி’ என்றாரென்க.

     ‘வருவது’ என்னாது, ‘வந்தொன்றுவது’ என்றதனால், இவற்றில், தம்மீறுதிரிந்து
நிற்கப்பெறுவனவும் சிலவுளவெனக்கொள்க; அவை : மன் மன்னை, கொன் கொன்னை
எனவரும்.

     (பி - ம்.) 1தனித்தியல்பின்றி 2அசைநிறைப்பனவும் 3பொருள் தோன்றி நிற்பன.
 

(420)

தெரிநிலை தேற்ற மையமுற் றெண்சிறப்
பெதிர்மறை யெச்சம் வினாவிழை வொழியிசை
பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.

     எ - ன், மேல், “தத்தம்பொருள” என்றார், அவற்றின்பொருளாவன
இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) தெரிநிலைமுதலான பதினாலும் இவைபோல்வன பிறவும்
இடைச்சொற்குப்பொருளாம் எ - று.

     இவற்றிற்கு உதாரணம் மேல்வருஞ்சூத்திரங்களுட் காண்க.

     ‘இன்னன’ என்றதனாற் சிலவருமாறு:- தொறு தோறு ஞெரேர் அந்தோ அன்னோ
கொல்லோ ஆ ஆவா அஆ இனி என் ஏன் ஏதில் ந கல் ஒல் கொல் துடும் துண்
பொள் கம் கொம் என்பன. இவற்றுள், தொறு, தோறு என்பன தாம் புணர்ந்தமொழிப்
பொருண்மையினைப் பலவாக்கி ஆங்காங்கென்பதுபட நிற்கும். அது, “குன்றுதொ
றாடலும் நின்றதன் பண்பே” (முருகு. 217), “சேரி தோறிது செல்வத் தியற்கையே”
(சீவக. 129), “அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம், செறிதோறுஞ் சேயிழை மாட்டு”
(குறள் 1110) என வரும்.