செய்யுமென்னும் வாய்ப்பாட்டுவினைகள் நிகழ்காலமும் எதிர்காலமும், எதிர்மறைவினை முக்காலமும் காட்டுவனவாம் எ - று.
வ - று. சென்று சென்றும், சேறு சேறும், வந்து வந்தும், வருது வருதும், உண்டு உண்டும், உண்கு உண்கும், உண்மின், உண், உண்க, வாழிய, வாழியர், சேறி, உண்மார், உண்ப, உண்ணும், உண்ணான் என முறையே காண்க.
‘ஈங்கு’ என்றமிகையான், ஈண்டோதியகாலத்திற் பிறழ்ந்து வருவன உளவாயின், அவையும், இடைநிலையேலாப் பெயரெச்ச வினையெச்சங்களும் அறிந்து முடியுமாற்றாற் பகுதிவிகுதிபண்ணிமுடிக்க.
இனி, இவ்வாற்றாற் பகுபதமுடிப்புழி,
மலையனென்னும் பகுபதமுடியுமாறாவது :-மலையையுடையனென்னும் 1பொருண்மைதோன்ற, “தத்தம்........பகுதியாகும்” என்பதனானே மலையென்னும் பொருட்பகுதியை முதலில்வைத்து அதன்மீதே, “அன் ஆன் அள் ஆள்” என்பதனானே அன்னென்னும் விகுதியைநிறுவி, “இ ஈ யைவழி யவ்வும்” என்பதனானே இடையே யகரவுடம்படு மெய்யை வருவித்து, “உடன்மே லுயிர்வந் தொன்றுவதியல்பே” என்பதனானே யகரத்தின் மேலே விகுதிஅகரத்தை யேற்றி முடிக்க. மலையதென்பதற்குத் துவ்வென்னும்விகுதிமை நிறுவி, “அன்னா னின்ன லற்றிற்று” என்பதனானே அகரச்சாரியையை இடையே தந்து, முன்போல் உடம்படுமெய்யை வருவித்து 2உயிரையேற்றி முடிக்க. ஏனைப்பாலிடங்களுக்கு இதன்மேலே விகுதிவேறுபாடல்லது விசேடமில்லை யென்க. மலையான், மலையள், மலையாள், மலையர், மலையார், மலையேன், மலையேம், மலையாய், மலையீர் என ஏனையிடங்களிலும் ஒட்டிக்கண்டுகொள்க.
நிலத்தனென்னும் பகுபத முடியுமாறாவது :-இவ்விடத்தனென்னும் பொருண்மைதோன்ற, ‘தத்தம்..........பகுதியாகும்’ என்பதனானே நிலமென்னும் இடப்பகுதியை முதலில்வைத்து, அதன்மீதே, ‘அன் ஆன் அள் ஆள்’ என்பதனானே அன்னென்னும் விகுதியை நிறுவி, “இலக்கியங் கண்டதற்கிலக்கணம்” என்பதனானே இடையே தகரஇடைநிலையை வருவித்து, “மவ்வீறொற்றழிந்து” என்பதனானே மகரவீற்றைக்கெடுத்து, “இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன், கசதப மிகும்” என்பதனானே தகரத்தை மிகுத்து, “உடன்மேலுயிர் வந்து” என்பதனானே உயிரையேற்றி நிலத்தனெனமுடிக்க. நிலத்ததென்பதற்குத் துவ்விகுதியைநிறுவி, அகரச் சாரியையை 3வருவித்துத் தகரத்தைமிகுத்து முன்போல முடிக்க. ஒழிந்தன முடிபு ஒக்கும்; விகுதி வேறென்க: நிலத்தள், நிலத்தர், நிலத்த, நிலத்தேன், நிலத்தேம், நிலத்தாய், நிலத்தீரென எல்லாப்பாலிடங்களிலும் ஒட்டுக.
பரணியானென்னும் பகுபத முடியுமாறாவது :-பரணிநாளிற் பிறந்தானென்னும் பொருண்மைதோன்ற 4முன்போலப் பகுதிவிகுதி தந்து, ‘இஈ ஐவழி யவ்வும்’ என்பதனான் யகரவுடம்படுமெய்யை வருவித்து உயிரேற்றி முடிக்க. பரணியது என்பதற்கு, முன்போலத் துவ்வென்னும்விகுதியும் அகரச்சாரியையும் உடம்படுமெய்யுங் கொடுத்து உயிரேற்றி முடிக்க. பரணியாள், பரணியார் என ஏனைப்பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க. | | | | | | | | | | | | | | | |
|
|