கற்போர் நெஞ்சங் காமுறப் படுதலும் இன்னோ ரன்ன தொன்னெறி மரபினர் பன்னருஞ் சிறப்பி னல்லா சிரியர் அறனே பொருட்பய னின்பெனு மூன்றின் திறனறி பனுவல் செப்புங் காலை முன்னர்க் கூறிய வெண்வகை யுறுப்பினுள் ஏற்பன வுடைய ராகிப் பாற்படச் சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ் சொல்லிய பொருளொடு சூழ்ந்துநன் குணர்தலுந் தன்னோ ரன்னோர்க்குத் தான்பயப் படுதலுஞ் செய்ந்நன்றி யறிதலுந் தீச்சார் பின்மையும் மடிதடு மாற்ற மானம்பொச் சாப்புக் கடுநோய் சீற்றங் களவே காமம் என்றிவை யின்மையுஞ் சென்றுவழி படுதலும் அறத்துறை வழாமையுங் குறிப்பறிந் தொழுகலுங் கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும் மீட்டவை வினவலும் விடுத்தலு முரைத்தலும் உடைய ராகி நடையறிந் தியலுநர் நன்மா ணாக்க ரென்ப மண்மிசைத் தொன்னூற் புலமைத் துணிபுணர் வோரே” (தொல். பொ. பாயி.*) என ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப் பாயிரத்தானே4 பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியனை உணர்ந்து வழிபட்டு, ஒரு நூல் கேட்பான் புகுந்த நன்மாணாக்கர்க்கு அந்நூலான் நுவலப்படும் பொருளும் அந்நூல் கேட்டலாற் பெறப்படும் பயனும் கேட்டற்கு உரிய அதிகாரிகள் ஆவார் இவர் என்பதூஉம் இன்னது முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்னும் இயைபும் உணர்ந்தன்றி நூல் கேட்டற்கண் மனவூக்கம் செல்லாமையின் இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒருதலையாக முன்னர் உணர்த்தல் வேண்டும். இந்நான்கும் உணர்ந்தவழியும் கற்று வல்ல சான்றோர் அல்லாராற் செய்யப்பட்ட நூல் ஆயின் கூறியது கூறல் முதலிய குற்றம் உடைத்தாம் அன்றே எனவும் கற்று வல்ல சான்றோரும் மற்றோர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவன் ----------------------------- 4தொல்காப்பியப் பொதுப் பாயிரம் இயற்றிய பேராசிரியர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியரின் வேறுபட்டவர்; காலத்தால் முந்தியவர். இப்பொதுப் பாயிரத்தை முதன்முதல் வைத்தியநாத தேசிகர் (இல. விள. பொ. பாயி.) எடுத்துக்காட்டுவார். |