நூலொடு முரணும் அன்றே எனவும் ஐயுற்று ஊக்கம் செல்லாமையின் அவ்ஐயம் நீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும் நூற் பெருமையும் அந்நூல் வழங்கும் நிலமும் அதன் முதல்நூலும் இவை என்பது தோன்ற, ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும். ஆகலின் இவ்வெட்டும் > இவ்வெட்டுடனே காலம், களன், காரணம் என்னும் மூன்றும் கூட்டிப் பதினொன்றும் தெரிப்பதே சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் என மேல் (47, 48) வகுக்கப்படும் ஆக்கியோன் பெயர் முதலியன உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மலர் தலை உலகின்-பரந்த இடத்தை உடைய உலகத்தின்கண்ணே, மல்கு இருள் அகல- நிறைந்த கண்ணிருள் கெட, இலகு ஒளி பரப்பி- விளங்கும் கதிரை விரித்து, யாவையும் விளக்கும்- கட்பொறிக்கு விடயமாகிய உருவம் அனைத்தினையும் காட்டும், பரிதியின்- சூரியனைப் போல, ஒரு தான் ஆகி- உலகுக்கு எல்லாம் தான் ஒரு முதலே ஆகி, முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த- தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்பும் ஆகியவற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலால் தலைவன் ஆகிய, அற்புத மூர்த்தி- ஞானமே திருமேனியாக உடையான், தன் அலர் தரு தன்மையின்- தனது விரிந்த தன்மையாகிய கருணையினாலே, மன இருள் இரிய- உயிர்களின் மனத்திருளாகிய அவித்தை கெட, மாண் பொருள் முழுவதும்- மாட்சிமைப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும், முனிவு அற அருளிய- விருப்புடன் அருளிச்செய்த, மூவறு மொழியுளும்- பதினெண் நிலத்து மொழிகளுள்ளும், குண கடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந் தமிழ்க் கடலுள்- இந்நான்கு எல்லையினை உடைய நிலத்து மொழியாகி இயல், இசை, நாடகம் என்று பெயர் பெற்ற பெரிய தமிழ் என்னும் கடலுள், அரும் பொருள் ஐந்தையும்- அவ்வறம் முதல் பொருள் நான்கையும் உணர்தற்குக் கருவியாய் அருமையவாகிய இயற்றமிழின் பாகுபாடான எழுத்துச் சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பொருளையும், யாவரும் உணர அவ்வியற்றமிழ் உணர்தற்கு முன்னரே உயர்ந்தோர் செய்யுளிடத்து ஆராய்ச்சி உடையராய் அவ்வாராய்ச்சியான் வலியோரே அன்றி எளியோரும் உணர, தொகை வகை விரியின் தருக என- வழியின் நெறியாகிய நால்வகையுள் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் ஆக்கப்படும் யாப்பினால் பாடித் தருக என, துன்னார் இகல் அற நூறி- பகைவரது பகைமை கெட அவரைத் துணித்து, இரு நிலம் முழுவதும் தனது எனக் கோலி- பெரிய பூமி அனைத்தினையும் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு, தன் மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர்- தன் மதயானைகளை எட்டுத் திக்கினும் திசைக்களிறுகள்போல நிறுத்திய வெற்றி மிகுந்து, தன் அளவே அன்றித் தன் தாதை, மூதாதை முதலியோரைத் தொட்டு வரும் கீர்த்தியினையும், |