| நன்னூல் விருத்தியுரை |
| பயிற்சி முறை |
| 41. | நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே மடநனி யிகக்கும். |
எ-னின், இதுவும் அது. இ-ள்: இவ்வாறு நூலைப் பயின்றவர்க்கு அறியாமை மிகுதியும் போம் எ-று. (41) |
| இருமுறை கேட்டலின் பயன் |
| 42. | ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே. |
எ-னின், இதுவும் அது. இ-ள்: ஒரு கால் கேட்ட துணையானே அமையாது, இருகால் கேட்பான் ஆயின் அந்நூலின்கண் பிழைபாடு மிகுதியும் இலன் எ-று. (42) |
| மும்முறை கேட்டலின் பயன் |
| 43. | முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். |
எ-னின், இதுவும் அது. இ-ள்: முக்காற் கேட்டான் ஆயின் ஆசிரியன் கற்பித்த முறை அறிந்து உரைப்பன் எ-று. (43) |
| மாணாக்கன் புலமை பெறுமாறு |
| 44. | ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல னாகும். |
எ-னின்40 இதுவும் அது. இ-ள்: ஆசிரியன் கற்பித்தனவற்றைத் தன் அறிவின்கண் அமையக் கற்றான் ஆயினும் புலமைத் திறத்தில் காற்கூறல்லது பற்றான் எ-று. (44) ---------------------------- 40கூழங்கைத் தம்பிரான் இந்நூற்பாவோடு இதற்கு அடுத்த நூற்பாவையும் சேர்த்து ஒரு நூற்பாவாகக் கொள்வார். |