பக்கம் எண் : 145
  

முதலாவது
 

எழுத்தியல்
 

கடவுள் வணக்கமும் அதிகாரமும்
 

{56}

பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே.
 
     எ-னின், கடவுள் வணக்கமும் அதிகாரமும்48 உணர்த்துதல்49 நுதலிற்று.

     இ-ள்: பூக்கள் மலிந்த அசோகமரத்தினது அலங்கரிக்கும் நிழலின்கண்
எழுந்தருளியிருந்த, நான்கு திருமுகங்களை உடைய கடவுளை வணங்கி, நன்றாகச்
சொல்லுவன் எழுத்திலக்கணத்தை எ-று.

     எல்லா நூலும் மங்கலமொழி முதல் வகுத்துக்50 கூற வேண்டுதலின், ‘பூமலி’
என்றும் எல்லாச் சமயத்தோராலும் வணங்கப்படும் படைப்பு முதலிய ஐந்தொழிற்கும்
உரிய எல்லாக் கடவுளாகியும் நின்றான் ஒருவனே என்பார் அருகனை, ‘நான்முகன்’
என்றும் கூறினார். இவ்வாறு வள்ளுவ நாயனாரும் ஒரு தெய்வத்தைக் குறியாமல்,
 
  “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். 3)
 
என வரையாது கூறுதல் காண்க.

     எழுத்து என்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை.

     எல்லாம் வல்ல கடவுளை வணங்கலான் இனிது முடியும் என்பது கருதி, ‘நன்
கியம்புவன்’ என்று புகுந்தமையின் இது நுதலிப் புகுதல் என்னும் உத்தி. (1)
---------------------------------
     48அதிகாரம், ஓத்து, சூத்திரம் என்பவை நுதலும் பொருள்களை மயிலைநாதர் (நன். 55) இப்பகுதியில் சற்று விரித்துக் கூறுவார். இவ்வாறே இயல்களுக்கு இடையே உள்ள இயைபையும் அவ்வவற்றின் தொடக்கத்தில் அவர் விளக்கிச் செல்வார்.
     49இந்நூற்பாவின் உரைக்குச் சிவஞான முனிவர் செய்த திருத்தம் ஆறுமுக
நாவலர் பதிப்பு உட்படப் பல பதிப்புகளில் இல்லை.
     50யாப்பருங்கல விருத்தி (பாயி.),

 

  “வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து
மங்கல மொழிமுதல் வகுத்து,,,”

என்னும் மேற்கோள் நூற்பாவைக் காட்டும்.