பக்கம் எண் : 19
  

பதிப்புரை
 

எண்ணி” (தொல். சிற. பாயி.) அவற்றின் அமைப்பியலை வழிநூல் இயற்றும் ஆசிரியன்
உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நூலின் கட்டமைப்பு சிறக்கும்;
ஆசிரியனின் நூலாக்கத் திறன் விளங்கும். பவணந்தி முனிவர் இந்த நூல்மரபை
உணர்ந்த பேராசிரியர். அதனால்தான் தமது நூலின் பொருளமைதியைக் கணித
முறையில் இவ்வளவு நிரல்பட அவரால் தொகுத்துக் கூற முடிந்தது. இது பவணந்தி
முனிவரின் தனித்தன்மை. தொல்காப்பியக் கல்வி தொய்வுற்ற காலகட்டத்தில் தோன்றி,
இலக்கண வேருக்கு நீர் ஊற்றிய பவணந்தி முனிவர்க்கு இத்தனித்தன்மை
வாய்த்திருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

     ஆக்குவித்தோன், “தொகைவகை விரியிற் றருகென” (நன். சிற. பாயி.)
வேண்டிக்கொண்டவாறு பவணந்தி முனிவர் நன்னூலை ஆக்கியுள்ள திறன்,
தொல்காப்பியத்துக்கும் நன்னூலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்
ஆகியவற்றை உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும்20 பல வகைகளில்
ஆராய்ந்துள்ளனர். இந்தக் கண்ணோட்டத்தில் தொல்காப்பிய நன்னூல் நூற்பாக்களை
ஒப்பிட்டு நோக்கிய சிவஞான முனிவர் கருத்தை மட்டும் சான்றுகளோடு சுட்டிவிட்டு
அடுத்த பகுதிக்குச் செல்லலாம்,

     தொல்காப்பியர் சொல் பல்கவும் பவணந்தி சொல் சுருங்கவும் சூத்திரம் செய்வர்
என்பது முனிவர் (இல. சூறா. பக். 108) கருத்து. சான்றாகச்,

     “சாவ வென்னுஞ் செயவெ னெச்சத்
     திறுதி வகரங் கெடுதலு முரித்தே.”

     “வாழிய வென்னுஞ் செயவென் கிளவி
     யிறுதி யகரங் கெடுதலு முரித்தே.”


என்னும் (தொல். உயிர். 7, 9) தொல்காப்பிய நூற்பாக்களை,

     “வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய்
     ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே.”

     “சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி.”
-------------------------------
     20இ. சாமுவேல் பிள்ளை-வால்ற்றர் ஜாயீஸ், தொல்காப்பிய நன்னூல்,
சென்னைமாநகரம், 1858; வெள்ளைவாரணர், தொல்காப்பியம்-நன்னூல்,
எழுத்ததிகாரம், அண்ணாமலைநகர், 1962; சொல்லதிகாரம், சிதம்பரம், 1971;
இராம. சுந்தரம், நன்னூல்-சொல்லதிகாரம், 1987.