பக்கம் எண் : 3
  

சிறப்புரை
 

பேராசிரியர் முனைவர் பொன். கோதண்டராமன்
தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
 

     பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் வழங்கி அருளிய
நன்னூல் பல உரைகளையும் பதிப்புகளையும் பெற்று இலக்கண உலகில் செல்வாக்கோடும்
புகழோடும் திகழ்கிறது. அதற்கு இப்போது செம்பதிப்பு ஒன்று வெளிவருகிறது. இது
ஆய்வுலகின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி.

     “நம்புவது நல்லது; அதை விடவும் நல்லது பரிசோதனை செய்வது”
(பதிப்புரை பக்.77) என்று முனைவர் தாமோதரன் கூறுவது ஆய்வுப் பணியில் உள்ள
அனைவரும் பின்பற்ற வேண்டிய கொள்கை. இந்தக் கொள்கை கைநழுவும் போது
பிழைகள் எங்காவது நுழைந்துவிடும். இந்த நூலின் பதிப்பாசிரியர் இந்தக் கொள்கையைக்
கைநழுவ விடாதவர். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு செம்பதிப்பை அவரால்
உருவாக்க முடிந்திருக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள நன்னூல் பதிப்புகளில்
காணப்படும் எந்தக் குறையும் இந்தப் பதிப்பில் இல்லை என்றே கூறலாம். அதற்கு
மேலாக அந்தப் பதிப்புகள் எதிலும் காணப்படாத நிறைகளும் இந்தப் பதிப்பில்
சேர்ந்துள்ளன என்பது மகிழ்ச்சிக்கு உரியது.

     தனி ஒரு மனிதர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நன்னூல்
பதிப்புகளையும் சுவடியையும் பதிப்பாசிரியர் ஊன்றி நோக்கி ஒப்பிட்டிருக்கிறார்.
பாடபேதங்கள், மேற்கோள்கள் முதலியவற்றை ஒன்று விடாமல் பரிசோதித்திருக்கிறார்.
அப்படிப் பரிசோதிக்கும் போது ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப
உ. வே. சா. போன்ற பெரியவர்களுக்கே அது நேர்ந்திருப்பது (பதிப்புரை பக். 22, 66)
பதிப்பாசிரியருக்குப் புலப்பட்டிருக்கிறது.

     புலமை வேறு; ஆராய்ச்சி வேறு. புலமை பெற்ற எல்லோரையும் ஆராய்ச்சி
வல்லுநர் என்று கொள்ள முடியாது. ஆராய்ச்சி வல்லுநர் எல்லோரையும் புலமை
பெற்றவராகவும் கொள்ள முடியாது. புலமையும் ஆராய்ச்சித் திறனும் இருந்தால்தான்
சிறந்த பதிப்புகளை உருவாக்க முடியும் என்பது இந்த நூலின் பதிப்புரையிலிருந்து