102

பாங்கி யஞ்சியச் சுறுத்தலும் ஆங்கவன்
கையுறை புகழ்தலும் தையல் மறுத்தலும்
ஆற்றா நெஞ்சினோ டவன்புலத் தலுமவள்
ஆற்றுவித் தகற்றலும் ஆகுநா லைந்தும்
இரந்துபின் னிற்றற்குஞ் சேட்படுத் தற்கும்
பொருந்துவ என்மனார் தெரிந்திசி னோரே.

(இ - ம்.) பாங்கியிற் கூட்டத்தின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைவனுட்கோள் சாற்றல் முதலாகப் பாங்கி ஆற்றுவித்தகற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபதும் இரந்து பின்னிற்றற்கும் சேட்படுத்தற்கும் பொருந்தும் கிளவியென்று சொல்லுவர் ஆய்ந்தோர் என்றவாறு.

அவற்றுள், தலைவனுட்கோள் சாற்றற்குச் செய்யுள்:

1"வாவுங் கலைவிந்தை காவலன் வாணன்றென் மாறையன்னீர்
ஏவுந் தொழிலெனக் கேதிய லாததிங் கேநுமக்கோர்
மேவுஞ்செய் குன்றமுஞ் சோலையு மாகப்பொன் வெற்பும் விண்ணோர்
காவுந் தரவும்வல் லேனெனை யாளுங் கடைக்கண் வைத்தே"

பாங்கி குலமுறை கிளத்தற்குச் செய்யுள்:

2"நீவே றுரைக்கின்ற தென்குற மாதெங்க ணேரிழைபோர்
மாவேழ வன்படை வாணன்றென் மாறை மணியையன்றித்
தாவேது மில்லாத் தமனிய மீது தலம்புரக்குங்
கோவே யழுத்துவ ரோவறி யோருங் குருவிந்தமே"

எனவும்,

3"இவளே
கான னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பெருங்கடல் கலங்க வுள்புக்கு
மீனெறி பரதவர் மகளே
நீயே,
நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணங்கல்வேண்டி.


1. த. கோ. செ: 81.

2. த. கோ. செ: 82.

3. நற்றிணை, செ: 15.