160

வருந்தொழிற் கருமை

161. தாயும் நாயும் ஊருந்துஞ் சாமை
காவலர் கடுகுதல் நிலவுவெளிப் படுதல்
கூகை குழறுதல் கோழிகுரற் காட்டுதல்
ஆகிய ஏழும் அல்லுக்குறித் தலைவன்
வருந்தொழிற் கருமை பொருந்துத லுரிய.

(இ-ள்.) தாய்துஞ்சாமை முதலாகக் கோழிகுரற் காட்டுதல் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும்இரவுக்குறிக்கண் தலைமகன் வருந்தொழிலருமைக்குப் பொருந்துதலுடையவாம் என்றவாறு.

தாய் துஞ்சாமைக்குச் செய்யுள்:

1"ஆழி யகன்புவி யுள்ளனயாவு மடங்கி நள்ளென்
றூழி முடிந்தன்ன வோங்கிருள் யாமத்து மோடையினுந்
தாழி யினும்போ தலர்தஞ்சை வாணன் றரியலர்போல்
தோழிநம் மன்னைகண் ணேதுயில் கோட றுறந்தனவே."

எனவும்,

2"மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றோ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ வன்னை
யொருநா ணகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே."

எனவும் வரும்.

நாய் துஞ்சாமைக்குச் செய்யுள்:

3"தண்ணென் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் றரியலர்போற்
பெண்ணென் பிறவியும் பேருடைத் தன்றிப் பெரும்பதிநங்
கண்ணென் பவர்வரக் கங்குலின் ஞானிக் கணங்குரைத் துத்
துண்ணென் கடுங்குரல் வாயன்னை துஞ்சினுந் துஞ்சிலவே."

என வரும்.


1. த. கோ. செ : 202.

2. குறு. செ : 292.

3. த. கோ. செ : 203.