இறைவியை ஆற்றுவித் திருந்த வருமை கூறலும் என்னும் ஆறிரு கிளவியும் ஒருவழித் தணத்தலின் விரியெனப் படுமே. (இ - ம்.) ஒருவழித்தணத்தலின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல் முதலாகத் தலைவியைப் பாங்கி ஆற்றுவித்திருந்த அருமைகூறல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டு கிளவியும் ஒருவழித்தணத்தலின் விரி என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. அவற்றுள், தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றற்குச் செய்யுள்: 1"திரைகே தகைமணங் கூடுமெம் பாடியிற் சென்றுவந்தியான் வரைகேன் வருந்துணை வல்லியை நீதஞ்சை வாணன்செவ்வேல் புரைகேழ் மதர்விழிக் கோங்கரும் பேர்முலைப் பூசல்வண்டு நிரைகேச வஞ்சியஞ் சேலென்று தேற்றுத னின்கடனே." என வரும். பாங்கி தலைமகனைச் செலவுவிலக்கற்குச் செய்யுள்: 2"பறந்தாங் கிவர்பரித் தேர்கட வேலுன் பதியடைந்தான் மறந்தாங் கமையவும் வல்லையன் பாதஞ்சை வாணனொன்னார் நிறந்தாங் கிவர்கணை போலுண்கண் மாமுகி னீர்மைகொண்டு புறந்தாழ் கருங்குழல் வெண்முத்த வாணகைப் பொன்னினையே." எனவும், 3"வருவை யல்லை வாடைநனி கொடிதே யருவரை மருங்கி னாய்மணி வரன்றி யொல்லென விழிதரு மருவிநின் கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ." எனவும் வரும். தலைமகன் நீங்கல் வேண்டற்குச் செய்யுள்: 4"அறையும் பொறையு மணந்தவெங் கானத் தணங்கையில்வைத் திறையும் பிரிவதற் கெண்ணுகி லேனெண்ண லார்வரைமேன் மறையும் படிவென்ற சந்திர வாணன்றென் மாறையில்வண் டுறையுங் குழலிசென் றேவரல் வேண்டுமெம் மூரகத்தே." என வரும்.
1. த. கோ. செ : 248.
2. த. கோ. செ : 249. 3. ஐங்குறு. செ : 233. 4. த. கோ. செ : 250.
|