கண்டோர் காதலின் விலக்கற்குச்செய்யுள்: 1"மாலுந் திருவு மெனவரு வீர்தஞ்சை வாணன்றெவ்வூர் போலுஞ் சுரமினிப் போகவொண் ணாது பொருப்படைந்தா னாலும் புரவி யருக்கனிக் கங்கு லடற்கடமான் பாலுந் தசையுமுண் டேதங்கு வீரெங்கள் பாடியிலே." எனவும், 2"எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை யரிய சேய பெருங்க லாறே." எனவும் வரும். கண்டோர் 3தன்பதி அணிமை சாற்றற்குச் செய்யுள்: 4"தொடங்கும் பிறைநுதற் றோகையு நீயுமுன் றோன்றுகின்ற கடங்குன் றிரண்டுங் கடந்துசென் றாற்கம லத்தடமுங் கிடங்கும் புரிசையுஞ் சூழ்ந்தெதிர் தோன்றுங் கிளைத்தபைந்தார்த் தடங்குங் குமநெடுந் தோள்வாணன் மாறையுந் தஞ்சையுமே."" என வரும். தலைமகன் தன்பதி அடைந்தமை தலைவிக்குணர்த்தற்குச் செய்யுள்: 5"சந்தனந் தோய்ந்து தயங்குமுத் தாரந் தரித்துவிம்மு நந்தனந் தாங்கி நடுங்கிடை போல நடந்திங்ஙனே நொந்தனங் காலென்று நோவல்பொன் னேயொரு நோயுமின்றி வந்தனங் காணிது காண்வாணன் மாறை வளநகரே." என வரும். இவற்றுள், பாங்கி தலைமகற்கு உடன்போக்குணர்த்தலும், தலைவிக்கு உடன்போக்குணர்த்தலுமாகிய இரண்டும் போக்கறிவுறுத்தற் குரிய: தலைமகன் மறுத்தலும், தலைவி நாணழிபிரங்கலுமாகிய இரண்டும் போக்குடம்படாமைக்குரிய: பாங்கி தலைவனை உடம்படுத்தலும் தலைவிக்குக் கற்புமேம்பாடு கூறலுமாகிய இரண்டும் போக்குடன் படுதற்குரிய;
1. த. கோ. செ : 320. 2. தொல், பொருள், அகத்திணையியல், 40-ஆம் சூ. உரை மேற்கோள். 3. தன்பதி - தலைவன் றன்பதி. 4. த. கோ. செ : 321. 5. த. கோ. செ : 322.
|