265

பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறுங்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே."

எனவும் வரும். பிறவுமன்ன,

(8)

பரத்தையிற் பிரிவின்விரி இவை யெனல்

208. மூன்றுசூத் திரத்து மொழிந்தவை யெல்லாம்
ஆன்ற பரத்தையி னகற்சியின் விரியே.

(இ - ம்.) பரத்தையிற் பிரிவின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் அவ்விறைவிக்கு என்றல் முதலாகப் பாங்கி மனைவியைப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பரத்தையிற் பிரிவின் விரியாம் என்றவாறு.

இவை வாயில்வேண்டல் முதலாக நால்வகைக்கும் ஏற்குமாறு அறிந்து கொள்க.

(9)

ஓதற் பிரிவு முதலிய மற்றைப் பிரிவுகளுக்கு உரிய கிளவிகள்

209. பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை
பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல்
பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்
1றொருமையிற் கூறிய வொன்பது வகைய
கல்வி முதலா வெல்லாப் பிரிவும்.

(இ - ம்.) நிறுத்தமுறையானே ஓதற்பிரிவு முதலிய ஐவகைப் பிரிவுகளின்வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பிரிவறிவுறுத்தல்முதலாக வந்துழி மகிழ்ச்சி ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பது வகையினை உடையவாம் கல்வி முதலாகிய ஐவகைப் பிரிவும் என்றவாறு.


1. ஒருமையிற் கூறிய - ஒரு தன்மையில் வைத்துக் கூறிய.