(இ - ள்.) புணர்ந்துடன்போய் மீண்ட தலைமகள் பிரியுங் காலத்துத் தலைமகனோடு சுரத்தியல்பு கூறலும் அவன் பிரிந்த காலத்து வருந்தி நெஞ்சொடும் பிறரொடும் சுரத்தியல்பு சொல்லலும் உரியள் ஆராய்ந்து சொல்லும் இடத்து என்றவாறு. எனவே புணர்ந்துடன்போகாத் தலைமகள் சுரத்தியல்பு கூறாள் என்றவாறு. தலைமகள் பிரியுங்காலத்து அவனொடு சுரத்தியல்பு கூறற்குச் செய்யுள்: 1"நினைத்தலும் நினைதிரோ வைய அன்றுநாம் பணைத்தா ளோமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழ லிருந்தன மாக நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி யொடித்துமிசை கொண்ட வோங்குமருப் பியானை பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர் அறியிடை யிட்ட வளவைக்கு வேறுணர்ந்து என்றூழ் விடரகஞ் சிலம்பப் புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே." என்பதாம். பிரிந்துழி, நெஞ்சொடுசுரத்தியல்பு கூறற்குச் செய்யுள்: "வில்லுழவர் நாளு மறுகு புள்ளும் போவர்கொல்." என்பதாம். பிரிந்துழிப் பிறரொடு சுரத்தியல்பு கூறற்குச் செய்யுள்: "அறியாய் தோழி யவர்சென்ற வாறே தறுகட் கொண்க னன்ன சிறுகண் யானை திரிதரு காடே." என்பதாம். இவை களவின் வழிவந்த கற்பின் ஒழிபு எனக்கொள்க. (8) நற்றாய் கூற்று நிகழாத இடம் 218. தலைவன் றலைவியொடு நற்றாய் கூறாள். (இ - ம்.) நற்றாய் கூற்றிற்கு எய்தியது ஒருசார் விலக்கல் நுதலிற்று. (இ - ள்.) தலைவனோடும் தலைவியோடும் நற்றாய் கூறப்பெறாள் என்றவாறு. (9)
1. நற்றிணை, செ : 318.
|