பாங்கியிற் கூட்டத்தின் வகை - 12. 1. இரந்து பின்னிற்றல் - தலைவன் பாங்கியின்பாற் குறையுற்று நிற்றல், (அதாவது, தலைவன் பாங்கியின் பால் தன் குறையைத் தீர்க்கவேண்டும் என இதமாகச் சொல்லுதல்; பின்னிற்றல் என்பது ஒரு சொல்; இதம் சொல்லுதல் என்பது அதன்பொருள்.) 2. சேட்படை - பாங்கி தலைவன் குறையைத் தீர்க்க உடன்படாமல் மறுத்தல். (சேட்படை என்பதற்குத் தூர விடல், அகற்றல் என்பன சொற்பொருள்; மறுத்தல் என்பது கருத்து.) 3. மடற்கூற்று - தலைவன் மடல் ஏறுவல் எனக் கூறுதல். 4. மடல்விலக்கு - பாங்கி, அவன் மடலேறுதலை விலக்கல். 5. உடன்படல் - பாங்கி தலைவனது குறையை முடிக்க நேர்தல். 6. மடற்கூற் றொழிதல் - தலைவனது குறையைத் தீர்க்கப் பாங்கி உடன்பட்டமையின், தலைவன் 'நான் மடலேறுவல்' என்று சொன்னபடி மடலேறாமல் அதனை விடுத்தல். 7. குறை நயப்பித்தல் - பாங்கி தலைவனது குறையை முடித்தற்குத் தலைவியை விரும்புவித்தல். 8. நயத்தல் - தலைவி விரும்புதல். (அதாவது, தலைவி தலைவனது குறையை முடிக்க உடன்படல்.) 9. கூட்டல் - பாங்கி குறியிடத்துத் தலைவியை உய்த்தல். 10. கூடல் - தலைவியைத் தலைவன் கூடுதல். 11. ஆயங்கூட்டல் - பாங்கி தலைவியை அழைத்துச் சென்று பாங்கியரிடத்தில் சேர்த்தல். 12. வேட்டல் - தலைவன் பாங்கியின் சொற்படி விருந்து விரும்பல். பகற்குறியின் வகை - 4. அவை : கூட்டல், கூடல், பாங்கிற் கூட்டல், வேட்டல் என்பன. சூ. 151. இவை பாங்கியிற் கூட்டத்தின் வகைகள் பன்னிரண்டனுன் ஈற்றிற் கூறப்பட்ட கூட்டல், கூடல், ஆயங்கூட்டல், வேட்டல் என்னும் நான்குமேயாகும். பாங்கியிற் கூட்டத்திற்கு உரிய கிளவிகளுள் ஈற்றிற் கூறப்பட்ட குறியிடம் கூறல் முதலிய பன்னிரண்டு கிளவிகளே இவற்றிற்கும் கிளவிகளாகும். ஒருசார் பகற்குறியின் வகை- 3. சூ. 153. 1. இரங்கல் - தலைவன் பிரிந்துழித் தலைவி வருந்துதலும், அதுகண்டு பாங்கிபுலம்பலும், தஞ்சம் பெறாது தலைவன் வருந்துதலுமாம்.
|