தூதிற் பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள்வயிற் பிரிவு என்னும் மூன்றற்கும் காலவரையறை 90. தூதிற் பிரிவும் துணைவயிற் பிரிவும் பொருள்வயிற் பிரிவும் ஓர்யாண் டுடைய. (இ - ம்.) தூதிற்பிரிவு முதலாய மூன்று பிரிவிற்கும் யாண்டு வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தூது காரணமாகப் பிரியும் பிரிவும், உதவி காரணமாகப் பிரியும் பிரிவும், பொருள் காரணமாகப் பிரியும் பிரிவும் ஒரு யாண்டெல்லையினை உடைய என்றவாறு. என்னை? 1"வேந்துறு தொழிலே யாண்டின தகமே" எனவும், 2"பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க் குரிய தன்றே யாண்டுவரை யறுத்தல்" எனவும,் 3"தூதும் பொருளும் ஓதிய வாகும்" எனவுஞ் சொன்னாராகலின், அஃதேற் பரத்தையிற் பிரிவுக்குங் காவற்பிரிவுக்கும் யாண்டு வரையறாதது என்னையோ? எனின், அவை காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரியப்படாமையின் ஈண்டு வரையறுத்திலர் எனக்கொள்க. (90) பரத்தையிற் பிரிவு நிகழ்தற்காகாக் காலம் 91. பூத்த காலைப் புனையிழை மனைவியை நீரா டியபின் ஈராறு நாளுங் கருவயிற் றுறூஉங் கால மாதலிற் பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன். (இ - ம்.) பரத்தையிற் பிரிந்த தலைமகற்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நீராடியபின் பன்னிரண்டுநாளுங் கருப்படுங் காலமாதலாற் பரத்தையிற் பிரிந்த தலைமகன் அப் பன்னிரண்டு
1. தொல், பொருள், கற்பியல், சூ: 47 2. இறையனார் அகப்பொருள், சூ: 41. 3. இடம் விளங்கவில்லை. 'ஏனைப்பிரிவும் அவ்வயின் நிலையும்' என்பது இதற்குத் தொல்காப்பியச் சூத்திரம். (தொல்) பொருள் கற்பியல், சூ: 49.
|