57

காதற்பரத்தையர் இலக்கணம்

114. யாரையும் நயவா இயல்பிற் சிறந்த
சேரிப் பரத்தையர் மகளி ராகிக்
காதலிற் புணர்வோர் காதற் பரத்தையர்.

(இ - ம்.) காதற்பரத்தையரது உரிமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காதற்பரத்தையர் என்போர் யாவரையும் விரும்பாத இயல்பினால் மிக்க சேரிப்பரத்தையருடைய மகளிராய்த் தம் அன்பினால் தலைமகனோடு கூடுவார் என்றவாறு.

(114)

காதற்பரத்தையர் உரிமை

115. அவருளும் வரைதற் குரியோ ருளரே.

(இ - ம்.) காதற்பரத்தையர்க்கு உரியதொரு சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காதற்பரத்தையருள்ளும் உளர், தலைமகனால் வரைந்துகோடற்கு உரியர் என்றவாறு.

(115)

தலைமகனும் தலைமகளும் துறவறம் மேற்கொள்ளுங் காலம்

116. மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனுந் தலைவியுந் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறங் காப்ப.

(இ - ம்.) தலைவனும், தலைவியும் துறவறங் காக்குங்காலம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மக்களொடு கூடி மகிழ்ந்து இல்லறத்தினைக் காத்துத் தமக்குப் பெருகிய காம வேட்கை யெல்லாந் தீர்ந்தகாலத்துத் தலைமகனும் தலைமகளும் தம்மூர் நீங்கி வனத்தின் கட்சென்று எல்லையில்லாச் சுற்றத்தொடு துறவறத்தினைக் காப்பர் என்றவாறு.

(116)

முதலாவது அகத்திணையியல் முற்றிற்று.