80

6. இடந்தலைப்பாடு

இடந்தலைப்பாட்டின் வகை

134. தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென்
றிவ்வோர் மூவகைத் திடந்தலைப் பாடே.

(இ - ம்.) இடந்தலைப்பாட்டின் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இடந்தலைப்பாடென்பது, தெய்வந் தெளிதலும் கூடலும், விடுத்தலும் என மூன்றுவகையினை உடைத்து என்றவாறு.

ஓர்:அசை. இக் கிளவி 1"பெற்றவழி மகிழ்ச்சி" என்பதனாற் கொள்ளப்பட்டது.

(18)

இடந்தலைப்பாட்டின் இலக்கண விரி

135. தந்த தெய்வந் தருமெனச் சேறலும்
முந்துறக் காண்டலும் முயங்கலும் புகழ்தலும்
உடன்புண ராயத் துய்த்தலும் எனவைந்
திடந்தலைப் பாட்டி னிலக்கண விரியே.

(இ - ம்.) இடந்தலைப்பாட்டின் இலக்கண விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தந்த தெய்வந் தருமெனச் சேறல் முதலாக உடன்புணராயத் துய்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் இடந்தலைப்பாட்டின் இலக்கணவிரியாம் என்றவாறு.

தந்ததெய்வந் தருமெனச் சேறற்குச் செய்யுள்:

2"மன்றும் பொதியினு மாமயில் சேர்தஞ்சை வாணன்வெற்பில்
துன்றும் புயலிளஞ் சோலையின் வாய்ச்சுற வுக்குழையைச்
சென்றுந்து சேல்விழி மின்னைமுன் னாட்டந்த தெய்வநமக்
கின்னுந் தருநெஞ்ச மேயெழு வாழியிங் கென்னுடனே"

என வரும்.


1. தொல், பொருள். களவியல். சூ: 11.

2. த. கோ. செ: 34.