1"எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ணன்னுதலரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே" எனவும் வரும். தலைவன் தலைவியைப் பாங்கிற் கூட்டற்குச் செய்யுள்: 2"என்னூடு நின்ற விளங்கொடி யேசங்க மேய்ந்துகுழாந் தன்னூடு செல்லுஞ் சலஞ்சலம் போற்றஞ்சை வாணன்வெற்பிற் பொன்னூடு செல்லும் புகழ்மணி போனின் புடையகலா மின்னூடு நுண்ணிடை யாருட னீசென்று மேவுகவே" என வரும். இவற்றுள், முன்னைய மூன்றும் சார்தல் கேட்டல் சாற்றல் என்னும் மூன்றற்கும் உரியவாம். பாங்கன் கழறல் முதலாகக் கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கும் எதிர்மறுத்தற்கு உரியவாம். பாங்கன் தன் மனத்து அழுங்கல் முதலாகத் தலைவன் தனக்குத் தலைவிநிலை கூறல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினொன்றும் நேர்தற்குரியவாம். தலைவன் சேறல் முதலாகத் தலைவியைப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்குங் கூடற்குரியவாம். தலைவன் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் பாங்கிற்கூட்டலும் ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற் குரியவாம். 3இதனுள், பாங்கனொடு தலைவன் கூறினவெல்லாம், 4"நிற்பவை நினைஇ நிகழ்பவையுரைப்பினும்" என்பதனாற் கொள்ளப்பட்டன. பாங்கன் கூற்றாயின வெல்லாம், 5"குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்" என்பதனாற் கொள்ளப்பட்டன. 8. பாங்கி மதிஉடன்பாடு பாங்கி மதிஉடன்பாட்டின் வகை 138. முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரு முள்வழி யவன்வர வுணர்தலென் 6றொருமூன்று வகைத்தே பாங்கிமதி யுடன்பாடு"7
1. ஐங்குறு. செ: 175. 2. த. கோ. செ: 62. 3. பாங்கற் கூட்டத்தின் விரியுள். 4. தொல், பொருள், களவியல், சூ: 11. 5. தொல், பொருள், களவியல், சூ: 11. 6. ஒருமூவகைத்தே என்பதும் பாடம். 7. முன்னுறவுணர்தலாவது, தலைவி பாங்கற்கூட்டத்தின் கண் பாங்கியை நீங்கிச் சென்று தலைவனைப் புணர்ந்து மீண்டு வந்து பாங்கி முன் உற்றவழி, அப் பாங்கி தலைவியது வேறுபாடு கண்டு கூட்டமுண்மை அறிதல்.
|