68முன்னுரை

யொன்றுமில்லை. ஐந்திரம் போன்ற பெருநூல்கள் தமிழகத்தில்  தோன்றவும் அவை வடக்கின்கண் வாழ்ந்த நூலோர்க்குப் பயன் படவும்  இக்கூட்டுறவும் ஒருமைப்பாடுமே  காரணம்   எனலாம். எழுத்தும்  சொல்லும்  பொருளும் பற்றிய இலக்கண மரபுகளை    ஒருசேரத்   தொகுத்துச்    சுருக்கமாகவும் தெளிவாகவும்    கூறும்    இலக்கணநூல்    தொல்காப்பியத்திற்கு  முன் இருந்ததாகத்      தெரியவில்லை.       பின்னரும்     தோன்றவில்லை. தொல்காப்பியத்துக்கு முன்னிருந்த  நூல்கள் தமிழ் இலக்கணப் பிரிவுகளுள் ஒவ்வொன்றையும்பற்றி   மிக   விரிவாகவும்    உணர்தற்கு   அரிதாகவும் இருந்தமையின் அவற்றுள் இயற்றமிழை ஒருசேரவும் எளிதாகவும் உணர்ந்து தமிழ்  மரபுகளைப் பேணிக்  காக்கும்   திறல்   மக்களிடையே  குறையத் தொடங்கியமை  கண்டு  தனது  பேரருள்  காரணமாக  இதனை  இதனால் இவ்வாறு  செய்ய  வேண்டுமென்று  நன்கு  சிந்தித்து  இந்நூலைத்  தமிழ் மரபுகளுக்கொரு காப்பாக  இயம்பித்  தொல்காப்பியம் என்னும் பெயரிட்டு இவ்வாசிரியன்  வழங்கினமையை  ஓர்ந்து  பனம்பாரனார் தொல்காப்பியன் எனத் தன்  பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன் என எடுத்துக்
கூறினார் என்க. இப்பேரருட்டிறமே பல்புகழுள் தலையாயது எனலாம்.
  

காலஞ்சென்ற யாழ்ப்பாணத்து நவாலியூர் ந. சி. கந்தையாப் பிள்ளையும், பேராசிரியர் சி. இலக்குவனாரும் இக்கருத்திற்கியைவர். மூதறிஞர் நாவலர் ச. சோமசுந்தர  பாரதியார்  அவர்கள்  நூலாசிரியன்  பெயரே  நூற்பெயராக வழங்குகிறது  என்னும்  கருத்தினராய்  நூற்பெயர் தொல்காப்பியன் என்றே
இருத்தல் வேண்டுமென்பார். இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை  முதலானோர்  தத்தம்  விருப்பிற்கேற்பப்  பலவாறாக உரை பகர்ந்தனர். இவர்தம் கூற்றுக்களுள்  பொருந்தாதனவற்றைத்    தக்க மேற்கோள் காட்டிப்  பேராசிரியர் வெள்ளைவாரணனார் மறுத்துள்ளமையை அவர் ஆய்வுரையுட் கண்டுகொள்க.
  

பல்புகழ்:   பலவாய    புகழ்.    பண்புத்தொகை.     அவையாவன: முற்கூறப்பெற்றனவும்,  தவமுதலாய   ஞானயோக ஒழுக்கங்களுமாம். இனி,
இது பல்கிய புகழ், பல்கும் புகழ் என வினைத்தொகையாக்கியும்  நயங்கான நின்றது. புகழை நிறுத்த என முடியும். நிறுத்த -  கலங்காமல்  நிலைபெறச் செய்த என்றவாறு. கலக்கமாவது பின்  ஆய்வாளர்கள் கலக்கிய கலக்கங்கள் கண்டாமன்றே அவை போல்வன.  மாயாமல்  நிறுத்திய - நிலைபெறுத்தின என்பார் முன் உரையாளர்.