நூன்மரபு73

நீட்சியும் குறுக்கமும் திரிபாகும்  மயக்கமும் வரிவடிவுசெய்து  கோடற்குரிய குறிப்பும்   இசையிடத்து     எய்தும்     நிலையும்பற்றி,    ஆடிநிழலின், அறியக்கூறுகின்றார்.
 

நூல்
 

சூத்திரம் 1:

எழுத்தெனப் படு(ப)வ

அகரமுதல் னகரஇறுவாய்

முப்பஃ தென்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே 

(1)
 

கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும்,  வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது.
 

பொருள்:தனித்துவரல்  மரபினையுடைய   எழுத்து  எனச்சிறப்பித்துச்
சொல்லப்  பெறுவன,  சார்ந்துவரல்   மரபினையுடைய   மூன்றுமல்லாமல்,
அகரமாகிய எழுத்து முதலாக னகரமாகிய எழுத்து ஈறாக  உள்ள முப்பஃது
என்று கூறுவர் ஆசிரியர்.
 

அகரனகரங்கள்  அகப்பாட்டெல்லையாக   நின்றன.  ‘படுவ’  என்னும்
பாடமே இந்நூல் நெறிக்கு ஒத்தது. சார்ந்துவரல் மரபினையுடைய  மூன்றும் உட்பட,   எழுத்து    முப்பத்துமூன்றாம்    என்றவாறு.  இதனை ‘‘மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்’’ (புணர்-1) என்பதனானும் அறிக.
 

எடுத்துக்காட்டு:(இக்கால வரிவடிவம்) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ
ஓ ஒள.  இவை உயிரெழுத்துக்கள். க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ
ழ ள ற ன.  இவை  அகரச்சாரியையொடு   நிற்கும்   மெய்யெழுத்துக்கள்.
இவற்றை  இக்கு,   இங்கு,   இச்சு  என  உயிர்ப்பிசையாற்  புள்ளியாக்கிக்
கண்டுகொள்க.  க்,  ங்,...........ன்   எனக்காட்டுதல்    அநுகரண  ஓசையை உட்படுத்திக்  காட்டுதலாகும்.   இவற்றின்  உருவும்  வடிவும் பிறப்பியலுட் கூறப்படும்.
 

இச்சூத்திரத்தான்   தமிழ்   எழுத்துக்கள்   முப்பத்துமூன்று   என்னும்
தொகையும்,  தனித்துவரல்   மரபின,  சார்ந்து  வரல்  மரபின   என்னும்
வகையும், முதல் இறுவாய் என்றதனான்  முறையும்,  எழுத்து  என்றதனான்
(தொகுதிப்) பெயரும் பெறப்பட்டன.