78நூன்மரபு

இயற்கையும்   செயற்கையுமாதல்  பற்றி இரண்டு மேற்கோள்  கூறினார்.
மற்று, முன்னையது   கால    அளவையும்  பின்னையது  ஓசையளவையும் குறிக்கும்   என்பார் ஒருசாரார். இங்ஙனம் இசையளவினை மாத்திரை எனக்
குறியீடு   செய்தது,   பின்னர்   ஆளுதற்   பொருட்டென்க.   மாத்திரை
என்பது   மா-(திறம்)   திரம்-என்பவை   இணைந்ததோர்  ஒட்டுப் பெயர்.
மா-அளவு திரம்-நிலை
  

சூ. 8: 

ஒளகார இறுவாய்ப் 

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப  

(8)
 

க - து:
 

மேற்கூறிய  குறிலும்  நெடிலுமாகிய  எழுத்துக்களைத் தொகுத்து
அவற்றிற்குப் பொதுக்குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:  அகரமுதல்   ஒளகார   இறுவாயாக   உள்ள  எழுத்துப்
பன்னிரண்டும்  உயிர் எனப் பெயர்பெறும் என்று கூறுவர் ஆசிரியர்.
 

அகரமுதல்   என்பது  முதற்சூத்  திரத்தினின்று தந்துரைக்கப் பெற்றது.
‘‘பன்னிருகையும்   பாற்பட   இயற்றி’’  என்புழிப்  போல முற்றும்மைமாறி
நின்றது.     இவற்றை     ‘‘ஆவி’’     எனப்    பெயரிட்டுக்   கூறுதல்
பிறழ்வுணர்ச்சியாகும்.   உயிர்   போறலின்  உயிர் எனப்பட்டது என்பதும்,
அஃது உவம  ஆகுபெயர் என்பதும் அத்தகையனவேயாம். உயிர்-(உய்+இர்)
உயிர்த்தலை   உடையது   என்பது   இதன்பொருள்.  (பிறவிளக்கங்களை
எழுத்துக்களின்  குறியீட்டு  விளக்கம்  என்னும்  தனிக்கட்டுரையிற் கண்டு
கொள்க.)
 

சூ. 9:

னகர இறுவாய்ப் 

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப 

(9)
 

க - து:
 

தனித்துவரல்   மரபினவாய   முப்பஃதுள்  உயிர்  எழுத்துக்கள்
தவிர்ந்த   ஏனையவற்றிற்குரிய  தொகையும்,   பொதுக்குறியீடும்
கூறுகின்றது.
 

பொருள்:  ககரமுதல் னகர இறுவாயாக உள்ள எழுத்துப் பதினெட்டும்
மெய்யென்னும்  பெயர்  பெறும் எனக் கூறுவர் புலவர். “அகர முதல் னகர
இறுவாய்”    (சூ-1)  என்புழிச்சார்ந்துவரல்  மரபினையுடைய   மூன்றற்கும்
இடங்கூறாமையின்   அவை   இடையே   நிற்குங்கொல்   என்னும் ஐயம்
நீங்கவும்   அவை  மெய்யெழுத்துக்களின் பின்னாக எண்ணப்படுதல் முறை
என்பது    தோன்றவும்   ‘‘னகர இறுவாய்’’   என்று   கூறிக் ககரமுதல்
என்பதை   உய்த்துணர   வைத்தார்.