xvii | குறிப்பிட்ட தொடர்களின் நுண்மையை விளக்கிய திறம் நன்று. நூ. 109: மெய்பிறிதாதல், மிகுதல், குன்றல் இவற்றின் விளக்கம் நுட்பமானது. நூ.110: அடையடுத்து வரும் சொற்களின் புணர்நிலை கூற வேண்டியதன் காரணம் ஆய்ந்து தெரிக்கப்பட்டுள்ளது. நூ.112: புணர்மொழிநிலை என்பது பாடம் அன்று; பொருள் மொழிநிலை என்பதே பாடமாதற்கு ஏற்றது என்ற செய்தி ஆய்ந்து நிறுவப்பெற்றுள்ளது. நூ.113: வேற்றுமை, அல்வழி பற்றிய விரிவான விளக்கம், எழுத்துப் படலத்தில் வேற்றுமை என்பன ஆறே, சொற் படலத்தில் அவை எட்டாகும் என்ற செய்திகளின் விளக்கம் இவ்விடத்துக்கு இன்றியமையாதது. | நூ.116: ‘வேற்றுமை வழிய பெயர்புணர் நிலை’ என்ற நூற்பாவின் உரை, ஆசிரியரின் கூர்த்தமதிக்கும் இயைபு நோக்கிப் பொருள்காணும் ஆற்றலுக்கும் தலையாய எடுத்துக்காட்டு. நூ. 117: பெயர்நிலைச்சுட்டுப் பற்றிய நூற்பாவினை அடுத்து வினைநிலைச்சுட்டுப் பற்றிய நூற்பா இருந்திருத்தல் வேண்டும் என்று நிறுவிய செய்தி மிகப்பொருத்தமானது. நூ..118: ‘அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே’ என்ற நூற்பாவில் உள்ள வழி என்ற சொல்லுக்குப் பெயர் வினைகளின் பின் எனவும் மருங்கு என்ற சொற்குப் பெயர்வினைகளின் உடனாதல் எனவும் பொருள் வரைந்த திறம் 132ஆம் நூற்பாவிற்கு ஆசிரியர் வரைந்துள்ள உரைக்கு அரணாம் வகையில் அமைந்துள்ளது. நூ. 119: சாரியைகளின் அடிப்படை வடிவங்கள் ஆராயப்பட்டுள்ளன. நூ. 132: ஒருவயின் ஒக்கும் என்று பாடங் கொண்டு சாரியை வழிவந்து விளங்கும் சாரியை, இடை நின்றியலும் சாரியை என இருவகைத் தாகும் எனவும், அவை தொகைமொழிகளிலும், தொடர்மொழிகளிலும், வருதலும் வாராமையும் ஆகிய இருநிலையும் பெறும் எனவும் ஆசிரியர் தங்கோளை நிறுவியுள்ளார். நூ.138: புள்ளியீற்றுமுன் என்ற நூற்பா உரைத் தொடக்கத்தில் புள்ளி என்பது பற்றி ஆசிரியர் தாம் கொண்ட கொள்கையை நிறுவியுள்ளார். | தொகைமரபு:- | நூ. 149: லகர ளகர ஈறுகளும், னகர ணகர ஈறுகளும் திரிதற்குக் காரணம் பொருள் நோக்கமன்று; மயக்க விதியின்மையே என்ற நுண்ணிய காரணத்தைச் சுட்டியுள்ளார். நூ. 152: வகார ஈற்றுள் தெவ் என்ற சொல் பெயரேயன்றி வினையன்று. ஆதலின் வகர ஈறு முன்னின்றானைத் தொழிற்படுத்தற்கண் வாராது என்று சுட்டிய திறன் போற்றத்தக்கது. |
|
|