124மொழிமரபு

அளபெடையாக ஈறாகும் என்பது கருத்து. ‘‘ஈற்றுநின் றிசைக்கும்  ஏஎன்
இறுதி, கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே’’ (இடையியல்-38) என்பதனான்
“மெய்யோடுகூடி  ஈறாகுங்கொல்’’  என்னும்  ஐயம் நீங்க,  ‘ஆகாது’  என
வலியுறுத்தியவாறு.
 

சூ. 72: 

ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே
(39)
 

க-து: 

ஒகரஉயிர் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய எகரமேயன்றி   ஒகரமும்   நகர   மெய்யொடு
கூடிவருதலல்லாத  இடத்து  அவ்விலக்கணத்ததேயாகும்.  என்றது;  ஒகரம்
நகரமெய்யொடு  கூடியல்லது   பிற  மெய்களொடுகூடி  மொழியிறுதிக்கண்
வாராதென்றவாறு.
 

எ - டு :  நொக்கொற்றா-நொஅலையல் எனவரும்.
 

சூ. 73: 

ஏஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை
(40)
 

க-து:

ஏகார ஓகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஏகார ஓகாரங்கள்   என்னும்   உயிரெழுத்துக்கள்   ஞகர
மெய்யொடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களொடு கூடி ஈறாகும்.
 

பொருட்பேற்றால்   ஏனையமெய்களொடு    கூடி    ஈறாகும்    என
நின்றதெனினும்,     இவற்றிற்கும்    இனிவருவனவற்றிற்கும்  ஙகர  மெய்
ஒழியக்கொள்க. என்னை?  ஙகரம்  ஒருமொழியின்  முதலிலோ  ஈற்றிலோ
மொழியாக்கம்   பெற்று   வாராமையானும்,  குற்றியலிகரம்  குற்றியலுகரம்
இதனை ஊராமையானும் என்க.
 

“இஃது ஒருதலையன்மை’’ என்னும் உத்திக்கு இனம்.
 

எ - டு சே, தே, நே, பே, மே, வே எனவும் கோ, சோ, அந்தோ, நோ,
போ, மோ, தெய்யோ, அரோ எனவும் வரும்.  ஏனைய  வந்தவழிக்காண்க.
இவற்றிற்கு ஈற்றசை  முதலாய  இடைச்சொற்கள்  புணர்ந்த  மொழிகளைக்
காட்டுதல் இந்நூல் நெறிக்கு ஒவ்வாதென்க.
 

சூ. 74: 

உஊ காரம் நவவொடு நவிலா
(41)
 

க-து:

உகர ஊகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்: உகர ஊகாரம் ஆகிய உயிரெழுத்துக்கள் நகரமெய் வகரமெய்
ஆகியவற்றொடு   கூடி   மொழியிறுதிக்கண்   இசைக்கமாட்டா.   ஏனைய
மெய்களோடு கூடி இசைக்கும் என்றவாறு.