எ - டு: நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு எனவும் நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ எனவும் வரும். இவற்றுள் பெயர் அல்லாதன விளிப்பெயரும், எச்சவினைகளுமாம். ஏனைய வந்துழிக் காண்க. | நவவொடும் எனப் புணர்ச்சிவிகாரத்தாற் குன்றிய எச்ச உம்மையை விரித்து, மேற்கூறிய ஞகரத்தொடும் நவிலா என்க. உரிஞு, பொருநு, கதவு, வரவு, செலவு என்பவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். இனி, வரவு, செலவு, கனவு, புரவு முதலாயவற்றை இயல்பீறாகக் கருதி உரையாசிரியன்மார் உகரம் வகரத்தொடு ஈறாதலை ‘‘நவிலா’’ என்னும் மிகையாற்கொள்க என்பர். இவையாவும் விதியீறுகளாதலின் அவர் கருத்து ஒவ்வாதென்க. | ஒருசாரார் உகரம் நகரத்தொடும், ஊகாரம் வகரத்தொடும் நவிலா என நிரனிறையாகப் பொருள் கொள்ள வேண்டுமென்பர். மற்றுமொருசாரார் இந்நூற்பா இடைச்செருகல் என்றும் தத்தமக்குத் தோன்றியவாறு கூறுவர். இவையாவும் தமிழ்ச் சொற்களின் அமைப்பினையும் நூற்பாவின் நுண்மையையும் ஆசிரியரின் அறிவியல் நோக்கையும் ஓராது கூறிய போலி உரைகளாம். வகர உகரஈறு விதியீறே என்பதை எனது சார்பெழுத்து ஆய்வுக் கட்டுரையுள் கண்டு கொள்க. | சூ. 75: | உச்ச காரம் இருமொழிக் குரித்தே | (42) | க-து: | தடுமாறாமல் முற்றியலுகரமாகவரும் உச்சகாரம் இரண்டே என்கின்றது. | பொருள்: சகரத்தொடு கூடிவரும் முற்றியலுகரம் இரு சொற்களுக்கு உரித்தாகும். | எ - டு: உசு, முசு எனவரும். பசு, வசு முதலியவை ஆரியச்சொற்கள். | அரசு, முரசு என்றாற்போலவரும் ஏனையவை, புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற்கேற்பன வாதலின் திரிபின்றி முற்றுகரமாக வருவன இவை இரண்டுமே என வரையறை கூறினார். | சூ. 76: | உப்ப காரம் ஒன்றென மொழிப | | இருவயின் நிலையும் பொருட்டா கும்மே | (43) | க-து: | பகரத்தை ஊர்ந்து முற்றியலுகரமாக வரும் சொல் ஒன்றே என்றும், அதுபெயராயும் வினையாயும் வருமென்றும் கூறுகின்றது. |
|
|