நூன்மரபு270

வல்லெழுத்து  வர  அதற்குரிய  மகர  ஒற்று  மிக்கதோ,  நிலைமொழி
மகரம்  கெடாது  நின்றதோ  என்னும் ஐயம் நீங்க மகரம் கெடாது நிற்கும்
என்பார் ‘‘நிலையலும் உரித்தே’’ என்றார்.
 

மகரஈறு  அல்வழிக்கண்ணும் துவரக்கெடும் (சூ-310)  என்பது  அல்வழி
யெல்லாம்  (சூ - 314)   என்னும்   சூத்திரத்துள்  ‘எல்லாம்’  என்பதனாற்
கொள்ளப்பட்டதாகலின்   அவ்விதி    இதற்கு   எய்தாமைப்   பொருட்டு
நிலையலும்   உரித்தே   என்றார்.  அவ்எச்ச  உம்மையான் வல்லெழுத்து
மிகாமையும் கொள்ள வைத்தார்.
 

“இலம்பாடு” என்பது ஒரு மொழியாக நிற்கும் உரிச்சொல். பாடு என்பது
விகுதி. இலம்படு என்பது இலம்+படு எனப்புணர்ந்து நிற்கும் இரண்டு சொல்.
படு   என்பது  முதனிலைத்  தொழிற்சொல். படுதல்  என்பது உண்டாதல்,
தோன்றுதல், உறுதல்,  அடைதல், மறைதல், கெடுதல் எனப் பொருள் தரும்
பல பொருளொருசொல்.
 

இலம்படு  புலவர்  என்பதற்கு  வறுமைப்பட்ட அல்லது வறுமைப்படும்
புலவர்  என்பது பொருள். இதனைப்  புறநானூற்றுப் பழைய உரையாசிரியர்
(புறம்-155) உரையான் அறிக. படுபுலவர் என்பது வினைத்தொகை.
 

இளம்பூரணரும்   நச்சினார்க்கினியரும்   இலம்படு   புலவர்  என்னும்
தொடருக்குப்   பொருள்   காண்பதில்    முரண்பட்டு   நின்றனரேயன்றி
இப்புணர்ச்சி  விதி  கூறியதன் நோக்கம் பற்றியோ, இச்சொல்லின் அமைதி
பற்றியோ ஓர்ந்துரைத்தாரல்லர்.
 

இலம்படு என்பது இன்மையானது உற்ற என அல்வழியாயும் இன்மையை
உற்ற  என வேற்றுமையாயும் பொருள் விரிதலின் இடம் நோக்கிப் பொருள்
கொள்க.
 

சூ. 317 :

அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை

(22)
 

க-து :.

மகர ஈற்று எண்ணுப் பெயர்க்காவதொருவிதி கூறுகின்றது
 

பொருள் :ஆயிரம்  என்னும்  சொல்லின்  இறுதி,  இயைவதற்கொத்த
எண்ணுப்பெயர் வருமிடத்து அத்துச்சாரியையொடு பொருந்திப் புணரும்.
 

எ.டு: ஆயிரத்தொன்று   -   ஆயிரத்துமூன்று  -   ஆயிரத்துப்பத்து,
ஆயிரத்துநூறு எனவரும். இவை உம்மைத் தொகை.