அஃதாவது; “துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே” (சூ. 310) ‘‘மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே’’ (சூ. 312) எனக் கூறிய விதிகளாற் புணரும் என்றவாறு. |
எ. டு:ஆயிரம் - பதினாயிரம் என நிறுத்திக் கலம் முதலாய அளவுப் பெயர்களையும் கழஞ்சு முதலாய நிறைப்பெயர்களையும் கொணர்ந்து ஆயிரக்கலம், ஆயிரச்சாடி, ஆயிரத்தூதை, ஆயிரப்பானை எனவும், ஆயிரநாழி, ஆயிரவட்டி எனவும், ஆயிரங்கலம், ஆயிரஞ்சாடி, ஆயிரந்தூதை, ஆயிரம்பானை எனவும் வல்லெழுத்துமிக்கும், மெல்லெழுத்து உறழ்வுமாக வருமாறு கண்டு கொள்க. நிறைப்பெயர்க்கும் இவ்வாறே ஆயிரக்கழஞ்சு; ஆயிரங்கழஞ்சு, தொடி, துலாம் எனக் கொணர்ந்து கூட்டிக் கண்டு கொள்க. |
சூ. 320 : | படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் |
| தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் |
| வேற்றுமை யாயின் உருபியல் நிலையும் |
| மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான |
(25) |
க-து : | ஒருசார் மகர ஈற்றுப் பெயர்களின் வேற்றுமைப் புணர்ச்சி கூறுகின்றது. |
|
பொருள் :எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும், நெடுமுதல் குறுகும் இயல்பினவாகிய பெயர்நிலைச் சொற்களும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், உருபு புணர்ச்சிக்கு ஓதிய இயல்பினைப் பெற்று நிற்கும்; அவ்வாறு நிற்குமிடத்து (பொதுவிதியான் மகரம் கெட) மெல்லெழுத்துமிகும். |
உருபியலுள் “எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்” (உருபு-19) எனவும், “தாம்நாம் என்னும் மகர இறுதியும்” (உருபு - 16) எனவும் விதந்து கூறியதனான் ஈண்டு வாளாகூறினார் என்க. தொடக்கங் குறுகிநிற்கும் சாரியையும் உளவாகலின் பெயர் நிலைக்கிளவி என்றார். |
உருபியல் நிலையுமாறாவது: படர்க்கைப் பெயர் ஒற்றும் உகரமும் கெட்டு ரகரப்புள்ளி நிற்கத் தம்முச்சாரியை பெற்று வருமொழி இறுதிக்கண் உம்முப் பெறுதலும், முன்னிலைப் பெயரும் அவ்வாறே நும்முச்சாரியை பெற்று இறுதிக்கண் உம்முப்பெறுதலும், தொடக்கங்குறுகும் பெயர்களுள் தாம், நாம் என்பவை தம், நம் எனக்குறுகி நிற்றலும், யாம் என்பது எம் எனத் திரிந்து குறுகி நிற்றலுமாகும். |