நூன்மரபு273

எ. டு:எல்லாரும்  +  கை =  எல்லார்தங்கையும்,  செவியும், தலையும்,
புறமும் எனவும்; எல்லீரும் + கை = எல்லீர்நுங்கையும், செவியும், தலையும்,
புறமும் எனவும்;  தங்கை,  நுங்கை,  எங்கை,  செவி, தலை, புறம் எனவும்
வரும்.
 

ஆவயினான என்றதனான் ஏனைக்கணங்கள்வரின்  வேற்றுமைக்கோதிய
பொதுவிதியான்  வருமெனக்  கொள்க. எ.டு: எல்லார் தஞ்ஞாணும், நூலும்,
மணியும்,  யாழும்,  வட்டும்,  அழகும்,   ஆடையும்   எனவரும்.  எல்லீர்
நுஞ்ஞாணும்,  நூலும், மணியும்  என  ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.
தம்,  நம்,  எம்   என்பனவற்றின்முன்   உயிர்வரின்  ஒற்று   இரட்டுதல்
தொகைமரபினுள் கூறப்பட்டது.
 

சூ. 321 :

அல்லது கிளப்பின் இயற்கை யாகும் (26)
 

க-து:

மேற்கூறிய பெயர்கட்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறப்பெற்ற     பெயர்கட்கு      அல்வழிப்புணர்ச்சி
கூறுமிடத்து அவை திரிபின்றி இயல்பாகப் புணரும்.
 

எ. டு:எல்லாருங்குறியர்,   சிறியர்,    தீயர்,    பெரியர்    எனவும்,
எல்லீருங்குறியீர்,   சிறியீர்,  தீயீர்,  பெரியீர் எனவும், தாங்குறியர், சிறியர்,
தீயர், பெரியர் எனவும் (இவை உயர்திணை) தாங்குறிய, சிறிய, தீய, பெரிய
எனவும்  (இவை அஃறிணை) நாங்குறியேம்,  சிறியேம், தீயேம், பெரியேம்
எனவும், யாங்குறியம், சிறியம், தீயம், பெரியம் எனவும் வரும்.
 

ஏனைக்கணங்கள்  வரின்  மேல்  ‘‘அல்வழி  யெல்லாம்’’ (புள்ளி - 19)
என்னும் சூத்திரத்து இலேசினாற் கொண்டவிதிகளைப் பெற்று முடியும்.
 

சூ. 322 :

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லாம் எனும்பெயர் உருபியல் நிலையும்

வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது 

(27)
 

க-து :

எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணையாக நின்று
இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:எல்லாம் என்னும் பொதுப்பெயர்  அஃறிணைப் பொருட்கண்
வருங்கால்     அல்வழியிற்   கூறினும்    வேற்றுமைவழியிற்    கூறினும்
உருபுபுணர்ச்சிக்கு   ஓதிய   இயல்பிற்றாய்   நிற்கும்.  வேற்றுமையல்லாத
வழிச்சாரியை நிலைபெறாது.