பொருள் :மகர ஈறு வருமொழி வகரம் வந்தியையின் தனது மாத்திரை குறுகிப்புணரும். |
எ. டு:நிலம்வலிது, வலம்வந்தான், புலம்வேண்டினான் எனவரும். நிலவலிமை, வலவாழ்வு என்பவை பொதுவிதியாற் கெட்டு நின்றன என அறிக. |
இதழ்வழி உருப்பெறும் மகரம் மூக்கொலியாதலின் இதழ்வழி உருப்பெற்று மிடற்றிசையான் ஒலிக்கும் வகரம் வரக் குறுகலாயிற்று. உரையாசிரியன்மார் ‘வகார மிசையும் மகாரங் குறுகும்’ எனப் பாடமோதுவர். அது பாடமாயின் மகரக்குறுக்கம் வருமிடம் கூறியதாகுமேயன்றி மகரங் குறுகுதற்குக் காரணம் கூறியதாகாது. இடங்கூறுதலே ஆசிரியர் கருத்தாயின் இந்நூற்பா, மொழிமரபின்கண் இருத்தல் வேண்டும். புணர்ச்சி வகையான் எய்தும் மகரத்தின் திரிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாதலின் அது பாடமன்மை புலனாம். |
சூ. 331 : | நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன |
| அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே |
| ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர் |
(36) |
க-து : | மகர ஈற்று நாட்பெயர்க்கு ஆவதோரிலக்கணங் கூறுகின்றது. |
|
பொருள் : மகர ஈற்று நாட்பெயர்ச் சொற்கள், மேல் இகர ஈற்று நாட்பெயர்க்கு ஓதிய அத்தன்மையனவாய் ஆன்சாரியையும், அதன்மேல் அத்துச்சாரியையும் வருதல் நீக்கும் நிலைமைத்தன்று, அத்துவருமிடத்து ஒற்றாகிய மெய்கெடும் என்று கூறுவர் புலவர். |
ஒற்றுமெய் என்பது மெய்யினது பிறிதொரு நிலை என்பது இதனானும் வலியுறும். |
எ. டு:மகத்தாற் கொண்டான்; ஓணத்தாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ‘‘ஆனொடு அத்தும் வரைநிலை இன்றே’’ என்னாது ‘‘அத்தும் ஆன்மிசை’’ என்றதனான் சிறுபான்மை பூராடத்துக் கொண்டான் என ஆன்சாரியை இன்றி அத்து ஒன்றே பெற்று வருதலும் கொள்க. |
‘‘அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுதல்’’ (புண-31) என்பதனான் நிலைமொழி ஒற்றுக்கெடுமேனும் மாட்டேற்றிக் கூறுமிடத்து ஐயந்தோன்றாவண்ணம் இவ்வாறு விளங்கக்கூறுதல் முன்னையோர் மரபு என்பது தோன்ற ‘‘என்மனார் புலவர்’’ என்றார். இவ்விளக்கம் இனி இவ்வாறு வருவனவற்றிற்கும் ஒக்கும். |