நூன்மரபு284

பொருள் :  தேன்  என்னும்  சொல்  மெல்லெழுத்து  வந்து புணரின்
மெல்லெழுத்து மிகுதலொடு மிகாமையுமாக உறழும்.
 

எ.டு :  தேஞ்ஞெரி  -  தேஞெரி, தேந்நுரை  - தேநுரை, தேம்மலர் -
தேமலர் எனவரும். னகரம் அதிகாரத்தாற் கெட்டது.
 

உரையாசிரியன்மார்   ‘இறுதியொடு  உறழும்’  எனப்பாடங்  கொள்வர்.
அஃது மெல்லெழுத்து என்னும் எழுவாயொடு  இயையாமையான் அப்பாடம்
பொருந்தாமை புலனாம்.
 

சூ. 343 :

இறாஅல் தோற்றம் இயற்கை யாகும்
(48)
 

க-து :

அஃது இறால் என்னும் சொல்லொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  அதிகாரத்தான்   நின்ற  தேன்  என்னும்  சொல் இறால்
என்னும்  சொல்  வருமொழியாகத்  தோன்றுதற்கண்  கேடும்  திரிபுமின்றி
இயல்பாயும் புணரும்.
 

எ. டு:  தேனிறால்  எனவரும்.  மற்று இவ்விதி பொது விலக்கணத்தாற்
பெறப்படுமாயினும்  இறால்  என்னும்  சொல்   வருமிடத்துப்   பின்வரும்
சூத்திரவிதியான்   நிலைமொழியீறு   திரிபுறுதலின்    ஏனைய     உயிர்
முதன்மொழி  வருங்கால்  இயல்பாதல்  போல  இதன் கண்ணும் இயல்பாக
வரும்  என  உணர்தற்  பொருட்டு   எடுத்தோதினார்  என்க. அற்றாயின்
‘‘ஒற்றுமிகு  தகரமொடு  நிற்றலும்   உரித்தே’’    என்புழி   உம்மையான்
இயல்பாதல்  பெறப்படாதோ  எனின்? அஃது  எதிர்மறை  உம்மையாகவும்
ஐயம் செய்யுமாகலின் பெறப்படாதென்க.
 

தோன்றுதற்கண் என்னும்   ஏழனுருபும், இயற்கையும்  என்னும்   எச்ச
உம்மையும் விகாரத்தாற்றொக்கன.
 

சூ. 344 :

ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே
(49)
 

க-து :

இறாஅல்    தோற்றத்தின்கண்    எய்தியதன்மேற்  சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் :  தேன் என்னும் சொல் இறால் என்னும் சொல் வருமிடத்து
இரட்டித்த தகர ஒற்றொடு நிற்றலும் உரித்தாகும். தகரம் மிகும் என்றதனான்
னகரக்கேடு தானே பெறப்படும். ஒற்றுமிகு தகரம் என்றதனான் இரட்டித்தல்
புலனாகும்.
 

எ.டு:தேன்+இறால் = தேத்திறால் எனவரும். உம்மை எச்சவும்மை.