ஒற்றுமிகுதகரம் இறால் தோற்றத்திற்கேயாகலான் ஏனை உயிர் முதன்மொழிவரின் தேனடை, தேனாறு, தேனீ, தேனுணா எனப் பொதுவிதியாற் புணருமென்க. தேத்தடை, தேத்தீ என்பவை சான்றோர் வழக்காயின் புறனடையாற் கொள்க. |
இவ்விரண்டு சூத்திரங்களையும் ஒன்றாக ஓதின் னகரக்கேடு பெறப்படாதென்க. |
சூ. 345 : | மின்னும் பின்னும் பன்னும் கன்னும் |
| அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல |
(50) |
க-து : | ஒருசார் னகர ஈற்றுச்சொற்களுக்குத் தொழிற்பெயருக்கு ஓதிய விதியை மாட்டேற்றிக் கூறுகின்றது. |
பொருள் : மின், பின், பன், கன் என்னும் அந்நான்கு சொற்களும் தொழிற்பெயரியல்பினவாய் உகரம் பெற்று வல்லெழுத்துவரின் மிக்கும் ஏனைக்கணங்கள்வரின் இயல்பாயும் புணரும். |
எ.டு : மின்னுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மின்னுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும்; மின்னுஞான்றது; மின்னுஞாற்சி எனவும் வரும். நீண்டது-நீட்சி, மாண்டது-மாட்சி, வலிது-வன்மை என்பவற்றொடும் கூட்டிக்கொள்க. இவ்வாறே பின், பன், கன் என்பவற்றோடும் ஏற்பன கூட்டிக் கொள்க. |
இந்நான்கும் பெயர்ப்பொருளினவாதலின் ‘தொழிற்பெய ரியல’ என்றார். மின்-மின்னற்கொடி; பின்-கூந்தல்ஒழுங்கு; பன்-சொல்; கன்-கொல்லச்சாதி. இவை தொழிலை உணர்த்துங்கால் முதனிலைத் தொழிற் பெயர்களாம். |
சூ. 346 : | வேற்றுமை யாயின் ஏனை எகினொடு |
| தோற்றம் ஒக்கும் கன்னென் கிளவி |
(51) |
க-து : | கன் என்னும் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் கன் என்னும் சொல், பறவையை உணர்த்தும் எகின் என்னும் சொல்லுக்குரிய விதியொடு ஒத்து, அகரம் பெற்று, வல்லெழுத்து வரின் மிக்கும், ஏனைக் கணங்கள்வரின் இயல்பாயும் புணரும். |
எ. டு:கன்னக்குடம், சாடி, தூதை, பானை எனவும் கன்னஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை எனவும் வரும். ‘தோற்றம்’ என்றதனான் சிறுபான்மை கன்னந்தட்டு என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க. |